Thursday, December 9, 2010

திருநெல்வேலி !

ஊரிலிருந்து திரும்பி வந்தாலும் ஊர் நினைவுகள் இன்னும் விடாதபடியால் பதிவுகளின் பக்கம் அடிக்கடி வர முடியவில்லை. அதனால் பின்னூட்டமிட முடியாததற்கு மன்னிக்கவும்.

ஊர் நிலவரங்களைப்பற்றி விரிவாக எழுதவேண்டுமென்பதே ஆசை. அதை நேரம் கிடைக்கும் போது பின்னொரு சமயத்தில் எழுதலாம். நம்மூரில் நான் பார்த்தவற்றிலிருந்து சில சுருக்கமாக.

************

பழுப்பு மண்ணையே பார்த்து வறண்டு போயிருந்த கண்களை திருவனந்தபுரத்திலிருந்து ஊர் வரும்வரை எங்கு பார்த்தாலும் பச்சைப்பாசேலெனக் வயல்வெளிகளும் , மலைக்குன்றுகளும் வரவேற்பளித்து கண்களை குளுமையாக்கியது மனதுக்கு இதமாக இருந்தது. கூடவே இதை விட்டுட்டு ஏன் வெளி நாடு போகிறோம் என்ற கேள்வியும்? எல்லாவற்றிற்கும் பணம்தான் காரணம்.

************

நம்மூரை விட வெளிநாட்டில் சம்பளம் அதிகம் என்ற எண்ணத்தையும் உடைத்து சுக்கு நூறாக்கியது சந்தித்த சில‌ நண்பர்களின் சம்பள விவரம். ஆம் ஏழு ஆண்டுகளுக்கு முன் நான் முதலில் சவுதிக்கு வந்த போது இருந்ததை விட மூணு மடங்கு சம்பளம் அதிகமாக வாங்குகிறார்கள். எனக்கு கொஞ்சங்கொஞ்சமாக இப்போதுதான் அரை மடங்கு உயர்ந்திருக்கிறது.

வெளிநாட்டு சம்பளத்துக்கும் ஊரில் வாங்கும் சம்பளத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அடுத்த முறை வரும் போது ஊரிலேயே இருந்துவிட வேண்டும்.

*************

இலவச கலர் டிவி எங்கள் ஏரியாவில் எல்லா வீட்டுக்கும் கிடைத்துள்ளது. இப்போதெல்லாம் ஒரு வீட்டில் ஹால், ரூம்கள் என ரெண்டு மூணு டிவி இருக்கிறது. சில வீடுகளில் ஸ்பேர் டிவியாக பரணில் வைத்துள்ளார்கள் :). பின்னே ஏன் அதிக மின்சாரம் செலவாகாது.

அனேகமாக வரும் தேர்தலில் வாஷிங்மெஷின் கொடுப்பதாக பேச்சு. அப்படிக் கொடுத்தால் இப்போது தினமும் ரெண்டுமணி நேர பவர்கட் நாலு மணி நேரமாக வாய்ப்புகள் அதிகம்.

**************

ஊரில் வாட்டர் ஃபில்டர் விற்பனை படு ஜோராக நடக்கிறது. ஒரு காலத்தில் ஆற்றில் ஓடும் தண்ணியை அப்படியே பிடித்துக்குடிக்கலாம். அவ்வளவு சுத்தமாக இருக்கும். இப்போது வீட்டு பைப்புகளில் வரும் தண்ணீர் பழுப்பு கலரில் வருகிறது. சுத்திகரிப்பு செய்கிறார்களா என தெரியவில்லை.

ஒருவேளை வாட்டர் ஃபில்டர் தயாரிப்பாளர்களுக்கும் மாநகராட்சிக்கும் என்ன தொடர்போ தெரியவில்லை. மக்களின் அலட்சியமும் இதற்கு காரணம். ஒன்று சேர்ந்து அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்காமல், வீட்டுக்கு வீடு வாட்டர் ஃபில்டர் வாங்கி வைக்கின்ற‌னர்.

**************

ஊரில் உள்ள விலைவாசிக்கு நூறு ரூபாயெல்லாம் பத்து ரூபாய் மாதிரி (ஒரு வேளை வெளிநாட்டில் இருப்பதால் அப்படி தெரியலாம்). எனக்கு உதய கீதம் படத்தில் கவுண்ட மணி தேங்காய் விலை அதிகமாயிருக்கு என்று சொல்லும் போது என்ன உள்ளே இருந்துட்டு வந்தியான்னு கடைக்காரர் கேட்பார். அது போல எந்த கடையிலாவது ரேட் ரொம்ப ஜாஸ்தியாயிருச்சு போலன்னு கேட்டால் ஆறு மாசமா இந்த ரேட்டுதான் அப்படிங்கிறார். நாம ஊர் வந்து ஒரு வருஷமானது அவருக்கு எப்படி தெரியும்.

ஆனாலும் ஊரில் உள்ளவர்கள் இதற்கெல்லாம் கவலைப்படுகிறமாதிரி தெரியவில்லை. அவர்களுக்கு பழகிவிட்டது போலும்.

**************

என்னதான் பொருளாதரப்பிரச்சனைகள் இருந்தாலும். நம்ம மக்களோட அருமை அவர்களை பிரிஞ்சு இருக்கும் போதுதான் தெரியுது. ஆள் நடமாட்டமே இல்லாத ஏரியாவில் வாழ்ந்து விட்டு. ஊரில் கடைவீதிகளில் மக்களை கூட்டம் கூட்டமாக பார்க்கும் போது ரொம்ப சந்தோசமாக இருந்தது.

குடும்பத்துடன் ஷாப்பிங் சென்று அரசனில் டீயும் பப்ஸுமோ, அல்லது சரவண பவ வில் ஒரு தோசையோ சாப்பிட்டு வரும் சந்தோசத்துக்கு விலை ஏது?

***************

இன்னும் பகிர்ந்து கொள்வதற்கான விஷ‌யங்கள் நிறைய இருக்கிறது. அவை பிரிதொரு சந்தர்ப்பத்தில்.

இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் ஸ்டார்ஜன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Sunday, November 28, 2010

மதிப்பிற்குரிய பொ .ம . ராசமணி அவர்கள் !

நாங்கள் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம். விடுமுறை நாளில் பள்ளியில் நடந்த ஒரு விழாவிற்கு சிறப்பு பேச்சாளர் ஒருவரை பாளையங்கோட்டையில் இருந்து அழைத்து வந்திருந்தனர்.

பொதுவாகவே இதுமாதிரி நிகழ்ச்சிகளை முடிந்தவரை தவிர்த்துவிட்டு கிரிக்கெட் விளையாட சென்று விடுவது வழக்கம்.ஆனால் எங்கள் தமிழாசிரியர் "வருபவர் பேசினால் நேரம் போவதே தெரியாது அவ்வளவு இனிமையா இருக்கும் யாரும் வராமல் இருக்கவேண்டாம் " என்று கேட்டுக் கொண்டதற்கிண‌ங்க அன்று காலை அனைவரும் ஆஜரானோம். பேச்சாளர் வந்தவுடன் விழா ஆரம்பமானது.

இப்போது இங்கு சிறப்பு விருந்தினராக வந்திருப்பவர்க்கு பெரிய அறிமுகம் தேவையில்லை. மக்களின் சிந்தனையைத்தூண்டும் விதமாக நகைச்சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் பல மேடைகளிலும் , வானொலியிலும் பேசி இருக்கிறார் அண்ணன் பொ.ம.ராசமணி அவர்கள். அவர்களை சிறப்புரை ஆற்றுமாறு அழைக்கிறேன் என தமிழாசிரியர் அறிமுகப்படுத்தினார்.

உண்மையிலேயே ஆசிரியர் சொன்னது போல் அந்த ஒரு மணி நேரம் அவர் பேசிய பேச்சு வாழ்க்கையில் மறக்க முடியாததாக அமைந்தது. அவர் சொன்ன சிறந்த ஜோக்குகள் ஏற்கனவே என் அப்பா சொல்லி கேட்டவையாக இருந்தது.

வீட்டுக்கு வந்தவுடன் அப்பாவிடம் சொன்னேன். அதற்கு அப்பா " அந்த ஜோக்குகள் அனைத்தும் அவர் பேசியதிலிருந்து கேட்டு சொன்னதுதான்" என்று சொன்னபோது அவரின் அருமையை உணர்ந்தேன். அவர் பேச்சாளர் மட்டுமல்ல பல நல்ல நூல்களை எழுதிய எழுத்தாளர் என்று பின்பு வந்த நாட்களில் அவரைப்பற்றி அறிந்துகொண்டேன்.

சமீபத்தில் பா.ரா வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டபோது அண்ணன் ஜெரி ஈசானந்தாவை சந்தித்தேன். பதிவுலகம் பற்றிய பேச்சு வந்தபோது , நீங்கள் ஏன் நெல்லை பதிவர்களை வைத்து மீட்டிங் போடக்கூடாது எனக்கேட்டார். யாரெல்லாம் இருக்கிறார்கள் எனக்கேட்டபோது, நம்ம சித்ரா போன்றவர்களை வைத்து ஆரம்பிக்கலாமே என்று சொன்னவர். மேலும் ஒரு சந்தோச தகவலை சொன்னார். சித்ராவின் அப்பா பெரிய பேச்சாளர் என்று.

யாரெனக் கேட்டபோது சொன்னார். த கிரேட் பொ.ம.ராசமணி. எனக்கு சந்தோசத்தில் தலை கால் புரியவில்லை. ராசமணி சார் பொண்ணா அவங்க என ஆச்சரியப்பட்டேன். அப்போது நினைத்துக்கொண்டேன் அவரின் பக்குவப்பட்ட எழுத்துக்கள் எங்கிருந்து வந்திருக்கும் என்று.

அன்றிலிருந்தே இந்த விசயத்தை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல் இருந்து கொண்டே இருந்தது. சரி சித்ராவிடம் ஒரு வார்த்தை கேட்டு விட்டு தெரியப்படுத்தலாம் என்றிருந்தேன். இன்று காலை அவரின் பதிவைப் பார்த்த போதுதான் தெரிந்தது. இன்று ராசமணி சாரின் முதலாமாண்டு நினைவு தினம் என்று.

அந்த சிறந்த மனிதருக்கு உங்களுடன் சேர்ந்து எங்களது அஞ்சலிகளை செலுத்துகிறோம் சித்ரா. தந்தை விட்ட இடத்திலிருந்து நீங்கள் தொடங்கி மென்மேலும் புகழடைய வாழ்த்துகிறோம்.

,

Thursday, September 9, 2010

ஈத் முபாரக் - இனிய ஈகை பெருநாள் வாழ்த்துகள்

இந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முடிந்து விட்டது வியப்பாக இருக்கிறது.

உண்மையைச்சொல்லப்போனால் அனைவரின் மனதிலும் ஒரே விதமான மகிழ்ச்சி குடியேறியிருக்கும் போது நேரம் போவது தெரியாதுதானே.

சந்தோசத்தில் மிகப்பெரிய சந்தோசமே மற்றவர்களை சந்தோசப்படுத்திப் பார்ப்பதுதான் என்று சொல்வது போல். இந்த ரமலானில் நம்மால் இயன்ற அளவு, நம்மை சுற்றி ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு உதவி செய்து, அவர்களும் பெருநாளை சிறப்பாக கொண்டாடுவதற்கு உதவ‌ வாய்ப்பளித்த இறைவனுக்கு அனைத்து நன்றிகளும்.

இதே மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் எனது இனிய ஈகை பெருநாள் நல்வாழ்த்துகள்.

இந்த நன்னாளில் நாமும், நமது குடும்பமும் மற்றும் நம்மை சுற்றியுள்ள அனைவரும் அனைத்து வளங்களையும் பெறவும், நமக்கு வரும் பிரச்சனைகளை லேசாக்கி, தீர்த்து வைக்கவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

,

Saturday, July 24, 2010

அன்புச்செல்வன் : பா. ரா. அண்ணன்

(காக்க காக்க சூர்யா ஸ்டைலில் படிக்கவும்)

கைகால் வலியோட, உடம்பு முழுக்க அசதியோடா தூக்க கலக்கத்துல உட்கார்ந்து இதை எழுதக் காரணம் நேத்து நடந்த சந்திப்புதான்.

என் பேர் அக்பர், அக்பர் PPS ( பிரபல பதிவர் சிரிப்பு பிரிவு ) ன் பேருக்கு பின்னாடி இருக்கிற மூனெழுத்து நான் படிச்சி வாங்கின பட்டமோ, என்னோட லட்சியமோ இல்லை. நம்மூருல ரொம்ப மலிவா கிடைக்கிறது அடை மொழி ஒன்னுதான். அதனால அதை நாங்களே சேர்த்துகிட்டோம். :)

வியாழன் இரவு செல்லில் சரவணன் அழைத்தார்.

சரவணகுமார் PPS : அக்பர் நாளை காலையில நான், ஆறுமுகம் PPS, முடிவிலிசங்கர் PPS, மற்றும் எண்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் பா.ரா அண்ணா நாலு பேரும் வாறோம் ஸ்டார்ஜன் PPS மற்றும் டீமோட ரெடியா இருங்க ஒரு வேட்டைக்கு போக வேண்டியிருக்கு.

அக்பர் : அட பா.ரா அண்ணனா! அவரு வர்றதே பெரிய விசயம் ஆச்சே. இந்த தடவை எப்படியாவது கூட்டி வந்துடுங்க நாங்க ரெடியா இருக்கோம்.

மறுநாள் மதியம் பன்னிரெண்டு மணிக்கு சொன்ன படியே நால்வரும் ஆஜராகிறார்கள்.

ஆறுமுகம் : இதுதான் பா.ரா.! எண்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட். இதுவரைக்கும் 150 எண்கவுண்டர் பண்ணியிருக்கார். எல்லாமே சக்சஸ். ஆனா ஒருத்தருக்கும் பாதிப்பில்லை.

ஸ்டார்ஜன் : அதெப்படி ?

சரவணன் : அவர் குறியே வேற.

சங்கர் : அதனாலதான் எல்லோரும் தப்பிச்சிட்டாங்களா?

ஆறுமுகம் : சீரியஸா பேசிட்டு இருக்கும்போது அங்கே என்ன ஜோக். இவருதான் நம்ம ஐந்து பேருக்கும் டிரைனிங் கொடுக்கப் போற ஆபிஸர். ஸார் இவரு அக்பர் அவரு ஸ்டார்ஜன் இன்னைக்கு வேட்டைக்குப் போற இடம் இவங்களுக்குத்தான் தெரியும். இவங்களோட போய் நாம சூட் பண்ணபோறோம்.

பா.ரா : அப்படியா! எல்லோருக்கும் வணக்கம். மொத்தம் 150 எண்கவுண்டர். ஒன்னு கூட மிஸ்ஸாகலை. ஏன்னா எல்லாமே அன்பால சுட்டது. அந்த சமயத்துல எல்லோர் கண்ணும் நம்ம மேலதான் இருக்கும். ரொம்ப கவனமா ஹாண்டில் பண்ணனும். சரி நீங்க நம்மாளுதான்னு தெரிஞ்சிக்க எல்லோரும் டி கார்டை காட்டுங்க.

எல்லோரும் காட்டுகிறார்கள். ஆறுமுகத்தோட கார்டை பார்த்தவுடன் ஷாக்காகும் பா.ரா.

பா.ரா : என்னாதிது. சிகரெட் குடிக்கிறபோஸ். அதுக்கு கீழே "சிகரெட் குடித்தல் உடல் நலத்துக்கு தீங்கானது" ன்னு சப்டைட்டில் வேற.

ஆறுமுகம் : யெஸ் சார். சிகரெட் குடிக்கிறமாதிரி படம் எடுத்தா அதுக்கு கீழே சப்டைட்டில் போடணும்கிறது அரசாங்கத்தோட உத்தரவு சார்.

பா.ரா : உங்க கடமை உணர்ச்சியை பாராட்டுறேன். ங்க வாழ்க்கையில எத்தனை தடைகற்கள் வந்தாலும் அதை தூசி மாதிரி நினைச்சி தட்டிவிட்டுட்டு போயிட்டே இருக்கணும் புரிஞ்சுதா. ஆமா உங்களையெல்லாம் யாராச்சும் ஃபாலோ பண்ணுறாங்களா.

ஸ்டார்ஜன் : என்னை 125 பேர் ஃபாலோ பண்ணுறாங்க. சில்வர் ஜூபிளி சார்.

அக்பர் : 125 ஃபாலோயர் 500 ஆக வாழ்த்துகள் ஸ்டார்ஜன்.

சரவணன் : அருமை ஸ்டார்ஜன். தொடருங்கள்.

சங்கர் : இது முடிவில்லாமல் தொடர வாழ்த்துகள்.

ஆறுமுகம் : ம்ம்ம். ரைட்டு. நடத்துங்க. :)

பா.ரா : இங்கே என்ன நடக்குது?

சங்கர் : அவருக்கு 125 ஃபாலோயர் சேர்ந்ததை ஊக்கப்படுத்துறோம் சார்.

பா.ரா : அடப்பாவிங்களா. நாம செய்யுற வேலைக்கு யாரும் நம்மை ஃபலோ பண்ணாம பார்த்துக்கணும். அது சரி எண்கவுண்டர்னா என்னான்னு தெரியுமா.

அக்பர் : எங்களுக்கு ஹிட் கவுண்டர்தாண்ணே தெரியும். எண்கவுண்டர்ன்னு புதுசா ஏதாச்சும் வந்திருக்கா என்னா. அப்ப உடனே விட்ஜெட் சேர்த்தாகணுமே.

பா.ரா : சரி சரி அதப்பத்தி பின்னாடி சொல்றேன். அப்புறம் என்னை அண்ணேன்னு கூப்பிட்டது ரொம்ப பிடிக்குது. இனி உறவைச்சொல்லியே கூப்பிடுங்க. இப்ப க்ரூப் போட்டோவுக்கு போஸ் கொடுங்க.

சங்கர் : ஆனா அதை பதிவுல போடாதிங்க. அண்ணன் முகம் வெளியாட்களுக்கு தெரியக்கூடாதுன்னு அரசாங்க ஆர்டர்.

எல்லோரும் போஸ் கொடுத்து படம் எடுத்தோம். அதை எடுத்தது அக்பரோட மச்சினன் அர்க்கம். அதுக்கு பக்கத்துல நின்னது அக்பர் தம்பி ஜெயினுலாபிதீன் என்று அப்போ உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஏன்னா அவங்க ரெண்டு பேரும் கேமராவுக்கு பின்னாடி நின்னாங்க.

எல்லோரும் சாப்பிட்டு விட்டு வேட்டைக்கு ரெடியாகி ஆறுமுகத்தின் நிஸ்ஸான் காரில் ஏறினோம்.

( முடிந்தால் இந்த மூடுக்கு கில்லில வர்ற "அர்ஜுனரு வில்லு" பாட்டை நினைத்து கொள்ளவும் )

ஆறுமுகம் ஆக்ஸிலேட்டரில் வைத்த காலை எடுக்காமல் 100 கடந்து போகிறார். எந்த ஸ்பீடு பிரேக்கரிலும் பிரேக் பிடிக்கவில்லை.

பா.ரா : என்ன மாப்ள ஆறுமுகம் அப்படி ஒன்னும் அவசரமில்லையே ஏன் இவ்வளவு வேகம்.

ஆறுமுகம் : நீங்க சொன்னதை நீங்க மறக்கலாம். நான் மறக்கமாட்டேன் மாமா. எத்தனை தடைக்கற்கள் வந்தாலும் தூசி மாதிரி தட்டிவிட்டுட்டு போயிட்டே இருக்கணும்னு நீங்கதானே சொன்னீங்க. நான் கடமையில கண்ணா இருப்பேன் மாமா. ( உண்மையைச் சொன்னா பின்னாடி ஒன்னு நோட் பண்ணிக்கிட்டே இருந்து பதிவெழுதி ஹிட் வாங்கிடும் விடக்கூடாது)

பா.ரா : ஓட்டணும்னு முடிவு பண்ணிட்டே. நீ ஓட்டு மாப்ளே.

ஆறுமுகம் : மாமா!

பா.ரா : நான் காரைச்சொன்னேன். :)

அக்பர் : ஸ்டார்ஜன் இந்த சிக்னல்ல இருந்து ரைட்ல போயி லெஃப்ட் போகணுமா?

ஸ்டார்ஜன் : இல்லை லெஃப்ட்ல போயிட்டு அப்புறம்தான் ரைட்டு.

சங்கர் : எனக்கு இது ரைட்டா தெரியலையே.

அக்பர் : ஆமா சங்கர். அது லெஃப்டுதான்.

சரவணன் : (மனதுக்குள்) இவங்க காட்டுற வழியில போறதுக்குள்ளே ரெண்டு புத்தகம் படிச்சி விமர்சனம் எழுதியிருக்கலாம்.

அக்பர் : சாரிண்ணே ரொம்ப நாளைக்கு முன்னாடி வந்ததா. இப்ப சிக்னல் , ஒன்வேன்னு நிறைய விசயங்கள் மாறியிருக்கு. அதான் குழப்பமா இருக்கு.

ஆறுமுகம் : (அடப்பாவி) கோட்டையாவது அதே இடத்துல இருக்கா.

ஸ்டார்ஜன் : என்ன இப்படி கேட்டுட்டிங்க. அங்கேயேதான் இருக்கு. ஆனா அது எங்கே இருக்குன்னுதான் மறந்து போச்சு.

ரோட்டோரமா பல இடங்களில் நிறுத்தி வழி கேட்டு, பல இடங்களை சுற்றி கடைசியில் ஜபுல்காரா எனப்படும் அந்த ழமை வாய்ந்த குன்று குகையை அடைகிறார்கள்.

பா.ரா : சூட்டிங்கை வெளியே வச்சுக்கவா. இல்லை குகைக்குள்ளே வைக்கலாமா.

சங்கர் : முதல்ல வெளியே வச்சுக்குவோம். சில நேரம் குகைக்குள்ள லைட்டிங் கம்மியா இருக்கலாம். ஆறுமுகம் கேமராவை கொடுங்க.

பா.ரா : ரொம்ப அருமையா இருக்கு இடம். மத்த இடங்கள்ல கடும் வெயில் அடிக்கும் போது இந்த இடம் மட்டும் நல்ல கூலிங்கா இருக்கே. சரி இனிமே சுட்டுத்தள்ளுங்க.

அங்கே பிடித்தது இங்கே.


(அர்க்கம், ஜெயினுலாப்தீன்,சங்கர், செ.சரவணக்குமார்,ஸ்டார்ஜன், ஆறுமுகம், அக்பர்)

நண்பர்களே நேற்று பா.ரா அண்ணன், செ.சரவணகுமார், ஆறுமுகம் முருகேசன், முடிவிலி சங்கர் நால்வரும் எங்களை சந்திக்க வந்திருந்தனர். நேற்று மறக்க முடியாத ஒரு இனிய நாளாக அமைந்து விட்டது. எந்த கவலையும் இல்லாமல் சிலமணி நேரங்கள் மகிழ்ந்திருந்தோம். ஜபுல்காரா என்ற குன்று குகைக்கு சென்று சுற்றிப்பார்த்தோம்.

சில காட்சிகளை சிலிக்கான் சிப்பில் புகைப்படங்களாகவும், அந்த சந்திப்பை எங்களது மூளையின் அடுக்குகளிடையே நீங்காத நினைவுகளாகவும் சேமித்து வைத்துள்ளோம் உங்களோடு பகிர்ந்து கொள்ள. அது பற்றிய விரிவான இடுகையை மற்ற பதிவர்கள் இன்னும் அழகாக எழுதுவார்கள். இது சும்மா ஜாலிக்கு. மீண்டும் சந்திப்போம்.

Wednesday, June 23, 2010

உண்மையான வீரர்

இந்தப்பிரச்சனைக்காக இப்படியொரு முடிவை எடுக்க வேண்டியிருந்தால் அவர்கள் எவ்வளவு மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள். உண்மையில் இதை நினைத்துப்பார்க்கையில் மனது கஷ்டமாக உள்ளது.

விசயம் இதுதான்.

கல்விக்கடன் கொடுக்கும் வங்கிகளின் சட்டதிட்டங்களை பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

நியாயமான தகுதிகள் இருந்தும் வங்கிகள் கடன் வழங்காமல் போனால் உங்களால் என்ன செய்ய முடியும்?

நம் பதிவுலகில் ஆயிரம் பதிவுகள் வந்தாலும் உண்மையிலே இது பற்றிய‌ விளக்கங்களுடன் சமுதாயத்திற்கு பயன்படும் பதிவுகள் எத்தனை வந்துள்ளன?

அப்படி வரும் பதிவுகள் எத்தனை பேரை சரியாக சென்றடைந்துள்ளன?

அப்படி சரியாக சென்றடைய வழி என்ன என்று யோசித்ததின் விளைவே இப்படி ஒரு பதிவும்.

சட்டம் சம்பந்தப்பட்ட பல நல்ல பதிவுகளை எழுதிவரும் திரவியம் நடராஜன் சாரின் இந்த இடுகை கண்டிப்பாக அனைவருக்கும் சென்றடைய வேண்டிய ஒன்றுதான் என்று நீங்கள் நினைத்தால். படித்து வாக்களியுங்கள்.

,

Monday, June 21, 2010

வெளிநாட்டு வாழ்க்கை : இஷ்டமா, கஷ்டமா?

இரு நாட்களுக்கு முன் ந‌ண்ப‌ர் செ.ச‌ர‌வ‌ண‌க்குமாரிட‌ம் பேசும் போது வெப்ப‌ம் தாங்காம‌ல் கால் பொத்து விட்ட‌தாக‌வும். அத‌னால் அன்று ப‌ணிக்கு செல்ல‌வில்லை என்றும் சொன்னார். ம‌ன‌து க‌ன‌த்துப்போய் விட்ட‌து.

சரவணன் சொன்னது போல் கோடைகாலத்தில் இங்கு வெயில் மிக மிக அதிகம். நான் வந்த இந்த ஏழு வருடத்தில் இப்போது அடிக்கும் வெயில் போல் இதுவரை கண்டதில்லை. 53 டிகிரி செல்சியஸிற்கு மேல் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

காலை எட்டு மணிக்கு அடிக்கும் வெயில் நம்மூர் மதிய வெயிலை விட அதிகம்.ரூமிலிருந்து கடை 500 மீட்டர் தூரம் இருக்கும். அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக வந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். அந்த அளவு அனல்.

இங்கு க‌டை, வீடு, கார் அனைத்திலும் ஏசி வ‌ச‌தி இருப்ப‌தால். க‌டைக‌ளில் வேலைப்பார்ப்ப‌வ‌ர்க‌ளுக்கு அதிக‌ பாதிப்பில்லை. ஆனால் க‌ட்டிட‌வேலை, சாலைப்ப‌ணி, பாலை நில‌ங்க‌ளில் இயந்திர நிர்மாண‌ ப‌ணிக‌ளை மேற்கொள்ப‌வ‌ர்க‌ளின் நில‌மை ப‌டுமோச‌ம்.

ச‌வுதிக்கு வேலைக்கு வ‌ந்த‌வ‌ர்க‌ள் எதிர்கொள்ள‌வேண்டிய‌ முக்கிய‌ ச‌வால் இங்குள்ள‌ ப‌ருவ‌ நிலைதான். க‌டும் குளிர், சுடும் வெயில். இது இர‌ண்டையும் தாக்கு பிடிக்க‌ முடிய‌வில்லை என்றால் ஊருக்குப் போய்விட‌ வேண்டிய‌துதான்.

அதே போல் ம‌ற்றொரு ச‌வால் குடும்ப‌ங்க‌ளை பிரிந்திருப்ப‌து. வீட்டில் அனைவ‌ரிட‌மும் பேசும் போதே இங்கு ந‌ம் ம‌ன‌க்க‌ண்ணில் அவ‌ர்க‌ள் என்ன‌ செய்து கொண்டிருப்பார்க‌ள் என்ப‌து தெரியும். குழ‌ந்தை ந‌ட‌ப்ப‌தையும், விளையாடுவதையும், அதற்கு பல் முளைத்ததையும் அவ்வாறே நாம் உணர முடியும்.

இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு குழப்பம் வரலாம். இவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌த்தையும் தாங்கிக்கொண்டு எத‌ற்கு வேலைப்பார்க்க‌ வேண்டும் ஊருக்கு வ‌ந்து விட‌ வேண்டிய‌து தானே. ஆனால் வருடா வருடம் வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டல்லவா இருக்கிறது என்று நீங்க‌ள் நினைப்ப‌து நியாய‌ம் தான்.

இங்கு வாழ்ப‌வ‌ர்க‌ளை ஊருக்கு வ‌ர‌விடாம‌ல் த‌டுப்ப‌து எது, யார் என்ன சொன்னாலும் ஊரில் இருப்ப‌வ‌ர்க‌ள் இன்னும் வெளிநாடு வ‌ர‌ துடிப்ப‌துக்கு எது கார‌ண‌ம்.

எல்லாவற்றிற்கும் ஒரு காரணம், ஒரே காரணம் பணம்.

சம்பாதித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்ற ஆசை. வெளிநாடு சென்றால்தான் ஊரில் உள்ள கடன்களை அடைக்க முடியும் என்ற சூழ்நிலை.

பொதுவாக வெளிநாடு செல்பவர்களின் நிலை புலி வாலை பிடித்த கதைதான். நாம் விட நினைத்தாலும் ஊர் சூழலும், பிரச்சனைகளும், ஊரில் போய் என்ன வேலை செய்ய என்ற பயமும் நம்மை ஊர் திரும்ப விடாது.

இங்குள்ளவர்களின் வாழ்க்கை நிலையை அலசுவதற்கு முன், முதலில் இங்குள்ள வேலை வாய்ப்புகளை பார்த்து விடலாம்.

வீட்டுப்பணி பெண்கள், வீட்டு டிரைவர்கள் இவர்கள் வீட்டுப்பணிக்கு மட்டும் வெளியில் வேலை பார்க்க கூடாது. இவர்களது அடையாள அட்டையில் அது குறிப்பிடப்பட்டு இருக்கும். ( ஆனால் பெரும்பாலான‌ டிரைவர்கள் வெளியிலும் வாடகைக்கு வண்டி ஓட்டுவார்கள் அது அவர்களின் சாமர்த்தியத்தை பொறுத்தது)

கடைகள் , சோரூம்கள், கம்பெனிகளுக்கு சேல்ஸ்மேன், டெக்னீசியன், டிரைவர், கேசியர் இன்னும் பல பணிகளுக்கு ஆள் எடுப்பார்கள். இங்கு ஓவர்டைம், போனஸ் மற்றும் இன்ன பிற சலுகைகள் ( இருந்தால்! ) கிடைக்கும். நமக்கு அமையும் இடத்தை பொறுத்து இதெல்லாம் மாறுபடும்.

சாலைப்பணி, கட்டிடப் பணி, இயந்திர நிர்மாண பணி, மற்றும் இது போன்ற புறச்சூழல் பணிக்கு வருபவர்களின் பாடுதான் கஷ்டம். இங்குள்ள கடும் குளிரையும், வெயிலையும் நேரடியாக சந்திப்பது இவர்கள்தான்.

இங்கு குறிப்பிட்டது போக மேலும் இது போல பல பணிகள் உள்ளன.

ஏஜெண்ட் மூலமாகவோ அல்லது சொந்தங்கள், நண்பர்கள் மூலமாகவோ விசா பெற்று இங்கு வருபவர்கள்தான் அதிகம்.

வீட்டிலுள்ள நகை நட்டையெல்லாம் விற்று , கடன் வாங்கி அல்லது சொந்த சேமிப்பைக்கொண்டு வெளிநாட்டுக்கு விமானம் ஏறி மேலே குறிப்பிட்ட எந்த வேலைக்கு வருபவர்களுக்கும் மூன்று வகையான‌ வாழ்க்கை காத்திருக்கிறது.

முதல் வகை ( ஏமாற்றம் )

ஏஜெண்டால் ஏமாற்றப்பட்டு , சொன்ன சம்பளம் கிடைக்காமல், சொன்ன வேலைக்கு பதில் வேறு கஷ்டமான வேலை கிடைப்பது. கொடுமையான முதலாளி அடிமை போல நடத்துவது என்று இவர்களுடைய கதைகளைதான் அடிக்கடி பத்திரிகைகளில் பார்க்கிறீர்கள்.இதிலிருந்து இவர்கள் மீள்வது ஆயுள் தண்டனை கைதி சிறையிலிருந்து தப்புவதற்கு சமம்.

சிலபேர் பணம் போனால் போகிறது எனக்கு வேலை வேண்டாம் என்று ஊர் திரும்பிவிடுவார்கள் (அதுவும் முதலாளி அனுமதித்தால்தான்). எல்லா சொத்தையும் விற்று வருபவர்களின் கதி? அதோ கதிதான். ஊருக்கு சென்றால் கடன் கழுத்தை நெரிக்கும். வேறு வழிகிடையாது. கிடைக்கும் சொற்ப பணத்தையாவது ஊருக்கு அனுப்பி வைத்து இங்குள்ள சூழ்நிலையை மறைத்து வாழ்பவர்கள் நிறையபேர். இவர்களின் கதையைக்கேட்டால் கண்ணீர் வந்துவிடும்.

இரண்டாம் வகை ( நடுத்தரம் )

ஏஜெண்டுகள் , அல்லது விசா கொடுத்தவர்கள் சொன்ன மாதிரி வேலை கிடைக்கும், சம்பளமும் சொன்ன மாதிரி கிடைக்கும். ஆனால் பெரிய முன்னேற்றம் எதுவும் இருக்காது. கொடுத்த வேலையைப் பார்த்துக்கொண்டு கிடைத்த சம்பளத்தை ஊருக்கு அனுப்பி விட்டு வருடத்துக்கு ஒருமுறையோ , இரு வருடத்துக்கு ஒரு முறையோ முதலாளி செலவில் ஊர் சென்று திரும்பி வந்து மறுபடியும் செக்கிழுக்க வேண்டியதுதான். நான், ஸ்டார்ஜன், சரவணன் எல்லாம் இந்த பிரிவில்தான் இணைகிறோம் :)


மூன்றாம் வகை ( முன்னேற்றம் )

இது உண்மையிலேயே சவாலான சூழல். இந்த வாழ்க்கைக்கு ஏங்கித்தான் ஊரிலிருந்து கனவுகளோடு மக்கள் இங்கு வருவது. ஆம் சொந்தமாக கடைகள் சோரூம்கள் நடத்துவது. இந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்து விடுவதில்லை. நமக்கு வாய்த்த முதலாளி மாதா மாதம் இவ்வளவு பணம் கொடுத்து விடு என்று சொல்லி கடையை நம் கையில் கொடுத்து விடுவார். அதிலுள்ள லாபமும் நட்டமும் நம் பொறுப்பு. இந்த மாதிரி வாய்ப்பு கிடைத்தவர்கள் தான் ஊரில் கோடீஸ்வரனாகி இருக்கிறார்கள். அது போல் வாய்ப்பை சரிவர பயன்படுத்த தெரியாமல் நஷ்டம் ஆனவர்களும் உண்டு. அது அவரர்களின் திறமை, அதிர்ஷ்டத்தை பொறுத்தது.

என்ன நண்பர்களே இப்போது சொல்லுங்கள் வெளிநாட்டு வாழ்க்கை கஷ்டமா? அல்லது இஷ்டமா?

டிஸ்கி : இங்கு முடிந்தவரை அனைவருக்கும் பொதுவான விசயங்களை குறிப்பிட முயன்றுள்ளேன். இது எனது கருத்து மட்டுமே. இங்கு வசிக்கும் பலருக்கு இதைவிட மோசமான் அல்லது நல்ல அனுபவங்கள் கிடைத்திருக்கலாம்.

,

Wednesday, June 16, 2010

முதல் நாள் இன்று... (100வது இடுகை)

அன்புள்ள நண்பர்களே !

இத்தனை நாள் பழைய சட்டையுடன் (எனக்கும் விருப்பமான சட்டையும் கூட) வலம் வந்தவன் இன்று புதுச்சட்டை மாற்றி விட்டேன் நண்பர்களே.

ஆம் உங்களுடனான இந்த சிநேகம் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைவது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு வழியாக தட்டுத்தடுமாறி நூறாவது இடுகையும் இன்று எழுதிவிட்டதில் ரெட்டிப்பு மகிழ்ச்சி.

பயணம் செய்வது அனைவருக்கும் விருப்பமான ஒன்று. அதுவும் இந்த இணையப்பயணத்தில் உங்களுடன் இணைந்து பயணிப்பதை எனது வாழ்வின் முக்கிய தருணமாக உணர்கிறேன்.

இந்த ஒருவருடத்திய பேலன்ஸ் சீட்டை அப்படியே உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன். (இதெல்லாம் ஓவர்ன்னு எனக்கே தெரியுது.கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்)

வரவு

நல்ல நண்பர்கள், நல்ல எழுத்துக்கள், சமூக சிந்தனைகள் என்று பல நல்லவைகள்.

அதை விட மேலாய், முகம் தெரியாத நண்பர்களிடம் இவ்வளவு நேசமாய் இருக்க முடியுமென்றால். அன்றாடம் பழகும் நண்பர்களிடம் ஏன் இருக்கமுடியாது என்று உணர்ந்தது. ( மனிதரை விட்டு பிரியும் போதுதானே அவர்கள் செய்த நல்லவைகள் கண்ணுக்கு தெரிகிறது. நெருக்கமாயிருக்கும் போது தவறுகளே பெரிதாக தெரிகிறது)

தமிழில் புதிய வார்த்தைகள் அறியக்கிடைத்தது. கூடுமான வரை எழுத்துப்பிழை இல்லாமல் எழுதப்பழகியது என்று இங்கு நான் பெற்றதுஏராளம்.

செலவு

குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஒன்றும் இல்லை. ஆனால் பணி செய்யும் இடத்தில் எழுதுவதால் நிறைய எழுத முடிவதில்லை. பின்னூட்டங்களும் இட முடிவதில்லை. அதையும் தாண்டி சில வேளைகளில் ஆர்வமிகுதியால் வலையைப்பார்த்துக்கொண்டே இருந்ததனால் சரியான நேரத்தில் டெலிவரி கொடுக்கமுடியாமல் சில வாடிக்கையாளர்களை இழந்ததும் நடந்திருக்கிறது.

அதன் பிறகுதான் சுயகட்டுப்பாட்டுடன் கையை கட்டிப்போட்டு வைத்திருக்கிறேன். மிகுதியான ஆர்வத்துடன் கலந்து கொண்டு பின்பு வெறுத்து ஒதுங்குவதை விட‌ மெதுவாகவே உங்களுடன் பயணிக்க விரும்புகிறேன்.

பலன் (இதிலிருந்து நான் கற்றது)

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

‍==========

மாம்ஸ், மாப்ஸ், சித்த்ப்பா, பெரியப்பா, அண்ணன்மார்கள், சகோதரிகள் என்று இதில்தான் எத்தனை விதமான உறவுகளை பெற்றுள்ளேன், பெற்றுக்கொண்டு இருக்கிறேன். உங்களுடைய இந்த அன்புக்கு நான் என்றும் கடமைப்பட்டவனாக இருக்கிறேன்.

நல்ல எழுத்தாளர்களும், கவிஞர்களும் பயணிக்கும் இந்த தளத்தில் நானும் இருப்பதை நினைத்து பெருமையடைகிறேன்.

எனக்கு இதுவரை உறுதுணையாக இருந்த அனைத்து பதிவுலக, படிக்கும் நண்பர்களுக்கும், கூகிளாருக்கும் மிக்க நன்றிகள்.

இன்றிலிருந்து மீண்டும் முதல் இடுகையாக நினைத்து எழுதத்தொடங்குகிறேன். உங்கள் ஆதர‌வுடன்...

நிறைகுறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

,

இதையும் விரும்புவீர்கள்.

Related Posts with Thumbnails