Saturday, October 31, 2009

திருநெல்வேலி சில குறிப்புகள்

அன்புள்ள நண்பர்களுக்கு,

அனைவரும் ரம்ஜான் மற்றும் தீபாவளியை சிறப்பாக கொண்டாடியிருப்பீர்கள். அனைவருக்கும் காலம் கடந்த கனிவான வாழ்த்துக்கள்.

வழக்கம் போலவே இந்த விடுமுறையில் ஊர் சென்று வந்ததும் மிகுந்த சந்தோசத்தை கொடுத்தது. அண்ணன் முரளிக்கண்ணன் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்கள் சென்னை வந்தால் கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என்று சொன்னார்கள். அவர்களது அன்புக்கு கடமைப்பட்டுள்ளேன்.

வெளி நாடுகளில் இருந்து விடுமுறைக்கு ஊர் செல்லும் என்னை போன்றவர்களுக்கு ஒவ்வொரு மணித்துளியும் மிக முக்கியம். அதனால்தான் பதிவு மற்றும் வேறு எந்த விசயத்திலும் ஈடுபடாமல் குடும்பாத்தாருடனே நேரம் முழுவதயும் செலவிட்டேன். நண்பர் சங்கா அவர்கள் ரம்ஜான் வாழ்த்து சொல்லி பின்னூட்டமிட்டிருந்தார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

நம்ம ஊரு பத்தி சொல்லனும்னா டீ‍ 4 ரூபாய், காபி 5 ரூபாய் என்று அனைத்து பொருள்களின் விலையும் பலமடங்கு கூடியிருக்கிறது. ஆனால் முன்பு மாதிரி விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம், மறியல் என்று அதிகமாக காண முடியவில்லை. மக்கள் சகித்துக்கொண்டு வாழப்பழகி விட்டார்கள் போல.

மக்களின் வாங்கும் திறனும் அதிகரித்துள்ளது. வழக்கம் போலவே ஜவுளிக்கடைகளில் மிகுந்த கூட்டம். வித்தியாசம் என்னவெனில் முன்பெல்லாம் ரெண்டு பேருக்கு துணி எடுத்தால் 1000 ரூபாய்க்குள் வரும். இப்போது ஒரு ஆளுக்கு 1000 ரூபாய் பத்த மட்டேன் என்கிறது.
ஆனாலும் சளைக்காமல் வாங்குகிறார்கள்.

என்னை ஆச்சர்ய படுத்திய மற்றொரு விசயம் நகைக்கடைகள். முன்பெல்லாம் கூலக்கடை பஜார் என்று மேற்கு ரத வீதியில் கடைகள் இருக்கும் ஒரு நேரத்தில் ஒரு வாடிக்கையாளர்தான் ஏதாவது பேரம் பேசிக்கொண்டிருப்பார். இப்போது ஜவுளிக்கடைகளுக்கு சமமாக பெரிய பெரிய நகைக்கடைகள். அதே போன்று கூட்டமும் அதிகம். ஜவுளி எடுப்பதை போன்று நகைகளை எடுத்துக்கொண்டிருப்பது சந்தோசமான விசயம்.

அப்புறம் தொழில் துறையில் எந்த முன்னேற்றமும் இல்லை. புதிதாக எந்த தொழிற்சாலையும் இல்லை. வண்ணாரப்பேட்டையில் செல்லப்பாண்டியனார் சிலை பைபாஸ் சாலையில் புதிதாக பாலம் கட்டுகிறார்கள் அது ஒன்னுதான் முன்னேற்றம். பல திட்டங்கள் அடிக்கல்லிலேயே நிற்கின்றன மேலெழும்ப வில்லை.

மின்சாரம் தினமும் இரண்டு மணி நேரம் தடை செய்து விடுகிறார்கள். அந்த சமயங்களில் சவுதியில் இதுவரை கரண்டு போனதே இல்லை என்று பந்தா காட்டுவேன்.

இருமாதங்கள் இரு வாரங்களாக கரைந்து சவுதியில் காலடி எடுத்து வைத்தவுடன் ஏசி காரில் ரூம் வந்தாலும் பைக்கில் பிள்ளைகளை வைத்து செல்லும் சந்தோசத்திற்கு ஈடு இல்லை.

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா.

இதையும் விரும்புவீர்கள்.

Related Posts with Thumbnails