Tuesday, April 27, 2010

காய்க்காத மரத்தின் விலை ஒரு லட்சம்

சவுதி அரேபியா பெட்ரோல் வளம் நிறைந்த மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பிடத்தக்க ஒரு நாடு.

இங்குள்ள சவுதிகள் ( நாம் இந்தியர்கள் என்பது போல் அவர்கள் சவுதிகள் ) பெருமையாக சொல்லிக்கொள்வார்கள், உன் காலுக்கு அடியில் தோண்டினால் தண்ணீர் வராது பெட்ரோல்தான் வரும் என்று.

அந்த வளம்தான் அவர்களை பணக்கார நாடுகளின் வரிசையில் இன்றும் வைத்திருக்கிறது. நமக்கு வேலை வாய்ப்பையும் அளித்திருக்கிறது.

ஆனால் இவ்வளவு வசதியிருந்தும் அவர்கள் ஏங்குவது எதற்கு தெரியுமா? இயற்கைக்கு.

ஆம் இங்கு நம் நாட்டை போல் பச்சை பசேலென புல்வெளிகளோ, அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுகளோ எதுவுமே கிடையாது. பேரிச்சம் மரங்களும் ஒரு சில ஏரியாவில்தான் நன்கு வளர்கின்றன.

வருடத்திற்கு 5 நாட்கள் அல்லது பத்து நாட்கள் மழை பெய்யும் அதுவும் ஒரு சில வருடங்கள் பெய்யாது. மழை நேரங்களில் யாரிடமாவது என்ன இப்படி ஒரே நசநசன்னு சொல்லிவிட்டால் போதும் அவர்களுக்கு கோபம் வந்து விடும். அப்படி சொல்லக் கூடாது, மழை இறைவனின் அருட்கொடை இன்னும் நிறைய பெய்யட்டும். அதுதான் நல்லது என்பார்கள்.

இங்கு ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 6 ரூபாய் ஆனால் ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீரின் விலை 24 ரூபாய். வீட்டிற்கு வந்து சப்ளை செய்பவர்களிடம் வேண்டுமானால் விலை குறைவாக இருக்கும்.

அவர்களுக்கு இந்தியாவை மிகவும் பிடிக்கும். காரணம் இங்குள்ள இயற்கை வளங்கள். மூணாறு பற்றியும் ஊட்டி பற்றியும் நிறைய சவுதிகள் பெருமையாக பேச கேட்டிருக்கிறேன்.

போலவே சவுதி அரசும் செயற்கையாக இயற்கையை உருவாக்கி வருகிறது இது போல‌


இந்த கார்டன் அமைக்க ஆன செலவு மட்டும் 5 கோடி (தோராயமாக)இருக்கும். அனைத்தும் செயற்கை புல்வெளிகள். தினமும் இரு வேளை நீர் தெளிக்க பைப் வசதிகள் என்று மிக அழகாக திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறார்கள்.

இதை திறந்து 2 மாதமாகிறது. தினமும் மாலையில் இருந்து இரவு 12 மணிவரை கூட்டம் கூட்டமாக ஏசி வீட்டை விட்டு இங்கு வந்து இளைப்பாறுகிறார்கள்.

மேலும் ரோட்டிற்கு நடுவே இது போல மரங்களை நட்டு தினமும் லாரிகள் மூலம் நீர் பாய்ச்சுகிறார்கள்.
ஏதாவது தருணத்தில் விபத்து ஏற்பட்டு இந்த மரங்கள் ஒடிந்தால் ஒரு மரத்திற்கு ஒரு லட்சத்தி இருபதாயிரம் ரூபாய் வீதம் அவரிடம் அபராதம் விதிக்கப்படும்.

காய்க்காத, நிழல்தராத அந்த மரத்திற்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்திலிருந்து தெரிந்திருக்கும் இயற்கைக்கு எவ்வளவு ஏங்குகிறார்கள் என்று.

ஆனால் நாம்?

இருக்கிற இயற்கை வளங்களை அழித்து கான்க்ரீட் காடுகளாக்கிக் கொண்டு இருக்கிறோம்.

நடுத்தர மற்றும் ஏழை வர்க்கத்தினர் மரங்கள் வளர்க்காவிட்டாலும் மரங்களை அழித்து நான் பார்த்ததில்லை. ஆனால் வேலியே பயிரை மேய்ந்த கதையாக அதிகாரத்தில் இருப்பவர்களால்தான் இயற்கை வளங்கள் அதிகமாக சுரண்டப்படுகிறது.

இந்த பூமிக்கு நம்மாலான சிறிய உதவி அல்லது கடமை. வாழ் நாளில் ஒரு மரமாவது நட்டு, பெரிதாக வளரும் வரை அதை பராமரிப்பதுதான்.

என்னதான் சொர்க்கத்தில் இருந்தாலும். அதை சொர்க்கம் என்று உணராதவரை ஒரு பயனும் இல்லை.

,

Sunday, April 25, 2010

யூத்ஃபுல் விகடனில் எனது கவிதை

வெளிநாட்டு வாசியின் லீவு நாட்கள் என்ற எனது கவிதை யூத்ஃபுல் விகடனில் வெளியாகியுள்ளது. அந்த கவிதை இதோ.

வெளிநாட்டுவாசியின் லீவு நாட்கள்.

கத்தை கத்தையாக

பணம் அழித்தவன்


கை
யில் எஞ்சி இருக்கும்

சில்லறை காசுகளின்


மு
க்கியத்துவத்தை

பெற்று விடுகின்றன


ஊர் வந்
தவனின்

இறுதி விடுமுறை நாட்கள்.


என்னை அனுப்ப சொல்லி உற்சாகப்படுத்திய நண்பர் சரவணனுக்கும், முகவரி தந்து அனுப்ப சொன்ன பா.ரா. அண்ணனுக்கும், என்னை எப்போதும் உற்சாகப்படுத்திக்கொண்டிருக்கும் ஸ்டார்ஜன் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

வெளியிட்ட விகடன் குழுமத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

இந்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

Saturday, April 17, 2010

வெளிநாட்டுவாசியின் புலம்பல்கள்

இரு நாட்கள் முன்பு பா.ரா அண்ணனிடம் இருந்து போன். என்ன அக்பர் எப்படியிருக்கீங்க, சரவணன் எப்ப வாரார் என்று கேட்டார். அண்ணனின் எழுத்துகளை போலவே பேச்சிலும் தனித்தன்மை உண்டு.

எனக்கு சின்ன சந்தேகம் இது அவரின் குரல் நடை (எழுத்து நடை மாதிரி:)) இல்லையே என்று நினைத்துக்கொண்டே, நேற்றே வருவதா சொன்னாரு போனுக்கு அடிச்சா எடுக்க மாட்டேங்குது என்றேன்.

இப்போ யாருட்ட பேசிட்டு இருக்கீங்களாம்ன்னாரு அட! இது நம்ம சரவணன்!! எப்படியிருக்கீங்க சரவணன் ஊரில் அனைவரும் நலமா என்று ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொண்டோம். இந்த வாரத்தில் சந்திப்பதாக கூறினார். பின்பு பா.ரா அண்ணனிடம் சிறிது நேரம் பேசினேன்.

நண்பரை சந்திக்கும் மகிழ்ச்சியை சொல்லி அறிய வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். இந்த வெள்ளியன்று ஐந்து மணி பஸ்ஸில் வருவதாக செல்லினார். சரியாக ஆறு மணிக்கு இறங்கியவரை அழைக்க பஸ் நிலையம் சென்றேன்.சிறிது தூரத்தில் வாசலில் ஒருவர் அவரைப்போலவே சற்று குண்டாக நின்று கொண்டிருந்தார்.

ஊருக்கு சென்ற சரவணனுக்கு உடம்பு வைத்துவிட்டதா என்று நினைத்துக்கொண்டே வாசலுக்கு அருகில் சென்றேன் அவர் இல்லை. போனடித்தேன். அக்பர் நான் உள்ளேதான் இருக்கேன் உங்களை பார்த்துட்டேன். அங்கே நில்லுங்க நான் வெளியில் வாரேன்னார்.

ஸ்லைடிங்க் டோர் ஓப்பனாக ஹீரோ என்ட்ரி. கட்டித்தழுவ முடியவில்லை கையில் டீ கப்புடன் இருந்ததால்.ஓரத்தில் டீ கப்பை கைவிட்டு என் கைகுலுக்கினார். மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு கடைக்கு வந்தோம்.

சரவணன் ஒரு புத்தக தகவல் களஞ்சியம். எப்போதோ படித்த புத்தகத்தின் பேரைச் சொன்னாலே போதும். அதை எழுதியவர். எந்த சூழ்நிலையில் எழுதினார். அதற்கு முன்னும் பின்னும் என்ன புத்தகங்கள் எழுதியுள்ளார் என்பதை சொல்லுமளவுக்கு ஞாபக சக்தி. கூடவே புத்தக நேசிப்பும் வெளிப்பட்டு விடுகிறது.

சரவணன், ஸ்டார்ஜன் , நான் மூவரும் பேசிக்கொண்டேயிருந்தோம் நேரம் போவது தெரியாமல். காலை 6 மணிக்கு பணிக்கு செல்லவிருந்ததால் விடை பெற்றார். மீண்டும் காத்திருக்கிறோம் மற்றுமொரு வெள்ளிக்காக.

பா.ரா அண்ணனின் பணிச்சூழல் காரணமாக சந்திப்பது தள்ளிக்கொண்டே போகிறது. அதுவும் ஒரு நாள் நிறைவேறும்.

===========================

போன வாரத்தில் பின் தொடரும் நண்பர்களின் எண்ணிக்கை நூறைத் தாண்டியது மனதை நெகிழ வைத்தது. பின் தொடரும் நண்பர்களுக்கும் , தொடர்ந்து என்னை வாசித்து உற்சாகப்படுத்திக்கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

============================

ஒரு கவிதை.

வெளிநாடுவாசியின் லீவு நாட்கள்.

கத்தை கத்தையாக

பணம் அழித்தவன்

கையில் எஞ்சி இருக்கும்

சில்லறை காசுகளின்

முக்கியத்துவத்தை

பெற்று விடுகின்றன

ஊர் வந்தவனின்

இறுதி விடுமுறை நாட்கள்.

,

Thursday, April 1, 2010

மாறாத கறைகள் ( ஏப்ரல் 1 சிற(ரி)ப்பு பதிவு)

இந்த வருடம் ஏப்ரல் ஒன்னில் யாருகிட்டயும் ஏமாறாம‌ இருக்கனும், குறிப்பா சட்டையில மை படாமா பார்த்துக்கிடனும். இது என் குறிக்கோள்.

காரணம் இருக்கிறது. சென்ற வருடங்களில் நான் பட்ட பாடு அப்படி. என்னதான் பழைய சட்டை போட்டாலும். நம் மக்கள் முதுகில் குத்துவதில் வல்லவர்கள் முன்னாடி சிரிச்சுகிட்டே போவாங்க, பின்னடி திரும்புனாலும் சிரிப்பாங்க. ஆனா வீட்டுல வந்து பார்த்த முதுகெல்லாம் மையா இருக்கும்.

ஒரு முறை இவர்களை மூக்கூடைக்க மை கலரில் சட்டை போட்டு வெளியில் சுற்றினேன். வெற்றிக்களிப்பில் வீட்டுக்கு வந்து சட்டையை கழற்றினால் பச்சை மை கருமையாக படர்ந்திருந்து.

கழுவினால் போய்விடுகிறது ஏன் இந்த அலப்பறை என்பது காதில் விழுகிறது. அவர்கள் மை தயாரிக்கும் விதமே தனி. மையில் வாழைச்சாறை கலக்கினால். சட்டை கலர் போனாலும் போகும் மை போகாது.

எனவேதான் இந்த ஆண்டு இவ்வளவு வைராக்கியம். வீட்டுக்குள்ளேயே இருந்தால் பயந்தங்கோளி என்று பட்டம் பெற வாய்ப்பிருந்ததால் மிக அடர் கலரில் பழைய சட்டையை மாட்டிக்கொண்டு தெருவை கவனமாக சுற்றினேன். எதிர்படும் நண்பர்களிடம் சிறிது நேரம் பேசி விட்டு, வீடு வந்து சட்டையை கழட்டினேன். வெற்றி இன்று ஒரு கறை இல்லை.

சந்தோசத்துடன் திரைச்சிலை விலக்கி சமையலறைக்குள் செல்ல முயன்ற போது. டம் தடார்!

" அடப்பாவி பயலே கொதிக்கிற ஆனச் சட்டியில வந்து விழுந்துட்டியே. பிள்ளையை பிடிங்கம்மா" பெரியம்மா கத்துகிறார்கள்.

நெஞ்சு வயிற்றுப்பகுதியில் மீன் குழம்பு மணம் சுடச்சுட.

குளிர்ந்த நீரில் கழுவி மருந்து எடுத்து போடப்போனார்கள்.

"வேணாம் " அலறினேன். பின்னே எந்த மை படாமல் இன்று தப்பி வந்தேனோ அந்த மை உடம்பு பூராவும் தேய்த்தால் சும்மாவா இருக்க முடியும்?

" சும்மா கிட‌ புண்ணு ஆறவேணாம. புள்ளைக்கு பொத்து போயிலோ கிடக்கு. நீ பார்த்து புடிச்சிட்டு போக கூடாதாக்கா" இது அம்மா.

" அவம்தாம்ளா வேகமா வந்து விழுந்துட்டான்" பெரியம்மா.

சிறிது நேரம் கழித்து அந்த வேதனையிலும் சிரித்துக்கொன்டிருந்தேன். அம்மாம்மா வந்து கேட்டார்கள்

"ஏம்மா வலிக்குதா".

வலிக்காம? நல்லாவே வலிக்குது.

" சரி எதுக்கு சிரிச்சே".

இல்லை இதுக்கு சட்டை முழுக்க மையா ஆனா நல்லாயிருந்துருக்குமேன்னு தோணுச்சு அதுதான்.

"என் ராசா ஒன்னும் ஆவாது நீ வீரன்லடா. "

இன்னொன்னுக்கும் சிரிச்சேன். நல்ல வேளை இப்ப‌ பத்து வயசா இருக்கும் போது நெஞ்சுல,வயத்துல பட்டுச்சு. வளர்ந்த பிறகு பட்டா என்ன ஆயிருக்கும்.

" அடி படுவா. வக்கனைப்பேச்சுக்கு குறை இல்லை அப்படியே அவரு மாதிரியே. "

இப்போது எழுதும் போதும் வயிற்றை தடவிப்பார்த்து சிரித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.


,

இதையும் விரும்புவீர்கள்.

Related Posts with Thumbnails