Wednesday, January 27, 2010

தொழில்நுட்பத்தை பகிர்ந்துகொள்வோம்


அண்ணன் கோவிக்கண்ணனிடம் பேசிக்கொண்டிருந்த போது, துறை சார்ந்த பதிவுகள் போடலாமே என்று ஆலோசனை கொடுத்தார். தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகள் எழுதும் ஜாம்பவான்கள் நிறையபேர் இருக்கும் போது நாம் என்ன புதிதாக சொல்லிவிட போகிறோம் என்ற எண்ணம் ஏற்பட்டது.

இருந்தாலும் நான் சந்தித்த வாடிக்கையாளர்களின் பிரச்சனையை அடிப்படையாக கொண்டு சில விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே இந்த இடுகையின் நோக்கம்.

நண்பர்களே வாரம் ஒரு முறை தொழில் நுட்பம் சார்ந்த பதிவுகள் எழுதலாம் என்று இருக்கிறேன். வழக்கம் போல் உங்கள் ஆதரவுகளை வழங்குங்கள். எழுதும் செய்தியில் பிழை இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன்.

ஒரு எளிய விசயத்திலிருந்து ஆரம்பிப்போம்.

இப்போதெல்லாம் மேஜைக்கணினி விலையிலேயே மடிக்கணினி கிடைப்பதால் அனைவரும் மடிக்கணினிக்கு மாறி வருகின்றனர்.

மடிக்கணினி வைத்திருப்பவர்களுக்கும் புதிதாக வாங்குபவர்களுக்கும் சில குறிப்புகள்.

1. மடிக்கணினி வாங்கும் போதே அதனுடன் Operating system DVD சேர்ந்து வரும். அதை பத்திரப்படுத்தி வைக்கவும். சில நேரங்களில் சிஸ்டத்தின் உள்ளேயே பதிந்து வைத்திருப்பார்கள். அதின் உள்ளே சென்று Recovery option மூலம் DVD க்களில் பதிந்து கொள்ளலாம். அதற்கு 2 முதல் 4 DVD தேவைப்படும்.

2. மடிக்கணினியின் முதல் மற்றும் முக்கிய பிரச்சனை பேட்டரி சம்பந்தப்பட்டதுதான். முதல் மாசத்தில் 3 மணி நேரம் உழைக்கும் பேட்டரி 6 மதத்துக்குப் பிறகு 1 மணி நேரம் தான் உழைக்கும். அதை தவிர்க்க நீங்கள் செய்ய வேண்டியவை.

முடிந்தவரை பேட்டரியை கழற்றி வைத்து விட்டு நேரடி மின் இணைப்பையே பயன்படுத்துங்கள். மின்சாரம் இல்லாத சமயங்களில் மட்டுமே பேட்டரி இட்டு பயன்படுத்துங்கள்.

பேட்டரியை முழுவதுமாக பயன்படுத்தி விட்டு சார்ஜ் செய்யுங்கள். சிறிது குறைந்த உடனே (அல்லது) அடிக்கடி சார்ஜ் செய்தால் பேட்டரி விரைவில் அதன் அதிக நேரம் உழைக்கும் திறனை இழந்துவிடும்.

அதற்காக
பேட்டரியை மாசக்கணக்கில் பூட்டி வைத்து விட வேண்டாம். பின்பு பயன்படாமலேயே போய் விடும்.

மிக முக்கியமாக கணினியுடன் வரும் சார்ஜரையே பயன்படுத்துங்கள். ஒரு வேலை அது கெட்டு விட்டால் அதே மாதிரி ஒரிஜினல் சார்ஜரையே உபயோகியுங்கள். தவறான சார்ஜர் உங்கள் பேட்டரியையும் கணினியையும் பழுதாக்கி விடும்.

3. மடிக்கணினி வாங்கும் போதே அதற்கேற்ப தரமான பேக் வாங்கி கொள்ளுங்கள். நீர் புகாத பேக்குகள் இன்னும் நல்லது.

4. மடிக்கணினிக்கும் திரவப்பொருள்களுக்கும் ஆகவே ஆகாது. பருகும் பொருள்களை அதன் அருகில் வைக்காதீர்கள். கூடுதல் பாதுகாப்புக்கு கீ போர்ட் பாதுகாப்பு கவர்கள் கிடைக்கும் அதை வாங்கி பயன்படுத்துங்கள்.

5. அதிக விலை உள்ள கணினிகளை விட உங்கள் பயன்பாட்டு அத்தியாவசியமாக உள்ளதையே வாங்குங்கள். ஏனெனில் மற்ற எதையும் விட கணினியிலும், செல்போன்களிலும் தினமும் புதுப்புது தொழில் நுட்பங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இரண்டு வருடத்தில் உங்கள் கணினியை மாற்ற வேண்டியது வரலாம்.

==============================

பிரணவ்.

சமீபகாலமாக தொழில்நுட்ப உலகில் அனைவராலும் உச்சரிக்கப்படும் பெயர் பிரணவ்.நண்பர் நட்புடன் ஜமால் விரல் நுனியில் என்ற இடுகையில் பிரணவ் பற்றிய காட்சியை பதிந்திருந்தார்.

தமிழில் அவரைப்பற்றி அறிய இந்த தளத்துக்கு செல்லுங்கள்.

பிரணவின் இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக்குங்கள்.


நன்றி.

,

Sunday, January 24, 2010

வாருங்கள் வரவேற்கிறோம். வாழ்த்துங்கள் வளர்கிறோம் (50 வது பதிவு)


கற்பூரத்தை விட காற்றில் விரைவாக கரையும் தன்மை வார்த்தைகளுக்குத்தான் உண்டு. வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தை அடுத்தவரின் காதுகளில் சரியாக சென்றடைவதைப் பொறுத்தே அந்த வார்த்தைக்கு மதிப்பு. நம் பெரியவர்கள் அடிக்கடி 'நான் சொன்னதை காத்துல பறக்க விட்டுட்டான் பார்'ன்னு சொல்லக்கேட்டிருக்கிறேன் அது இதனால் தான் போலும்.

பேச்சு வழக்கிற்கும் எழுத்துக்கும் உள்ள அடிப்படை வித்தியாசமே இதுதான் போலும். நம் வாய் வழியே வரும் வார்த்தைகளை விட கை வழியே வரும் வார்த்தைகள் அதன் திடத்தன்மையை இழப்பதில்லை அதனால்தான் இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் திருக்குறள் இன்றும் இருக்கிறது.

எழுத்துக்கள் மிகப்பழமையானவை ஆனால் அவை எழுதப்படும் போது அதன் அர்த்தங்கள் ரோஜா மொட்டு மலர்வதைப் போன்று புதிதாகவே இருக்கின்றான.

அதனால்தான் அனைவருக்கும் படிக்க,படிக்க எழுத்தின் மீதான காதல் கூடிக்கொண்டே போகிறது. புதிது புதிதான தேடுதலும் தொடர்கிறது.

அது என்னை மட்டும் விட்டு விடுமா என்ன. தீவிர இலக்கிய ஆர்வம் இல்லாவிட்டாலும், சிறுவர்மலர், வாரமலர், ஆனந்த விகடன், குமுதம், சுஜாதா, எஸ்.ராமகிருஷ்ணன், வலைத்தளம் என்று எழுத்தை நேசிக்கும் அனைவரைப்போலவும் எனது வாசிப்பனுபவமும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

நண்பர்களாகிய நீங்கள் கொடுத்த உற்சாகமும் ஆதரவும் வாசகனாக இருந்த என்னை பதிவராக்கி இன்று 50 வது இடுகையும் போட வைத்துள்ளது. 500 இடுகைகளை கடந்து அமைதியாகஎழுதிக்கொண்டிருப்பவர்கள் மத்தியில் இந்த கொண்டாட்டம் சற்று அதிகமாக தோன்றினாலும், ஆயிரம் மைல் தூரத்தை கடப்பது முதல் அடியிலிருந்தே ஆரம்பமாகிறது என்பதால் குழந்தைக்கு ஐஸ்க்ரீம் கிடைத்தால் ஏற்படும் சந்தோசத்தை நான் இப்போது உணர்கிறேன்.

நான் இதுவரை எழுதிய மொக்கைகளையும் , சில நல்ல பதிவுகளையும் (அது எங்க இருக்கு) வாசித்து என்னை உற்சாகப்படுத்தும் அனைத்து உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

பின்னூட்டமிட்டு ஆதரவளித்து வரும் நண்பர்களுக்கும், தமிழிஷ் , தமிழ்மணத்தில் வோட்டு போட்ட (இனி போட விருக்கும்) நண்பர்களுக்கும், பிரத்யோகமாக நன்றி சொல்ல நான் கடமை பட்டிருக்கிறேன் ( ஏன்னா அதுக்கு பெயர், கடவுச்சொல் கொடுத்து எழுதுறதுக்கு ஒரு இடுகை எழுதி விடலாம் ).

வாழ்க்கை என்பது போட்டி போடுவது அல்ல அது பரிட்சை எழுதுவது போல், போட்டியில் எவ்வளவு முயன்றாலும் ஒருத்தர்தான் வெற்றி பெற முடியும். பரிட்சையில் முயற்சி செய்யாதவர் மட்டுமே தோல்வியடைவார். போனதேர்வை விட இந்த தேர்வில் உங்களை நீங்கள் முந்தினால் அதுதான் உண்மையான வெற்றி என்று சொல்லி போட்டி மனப்பான்மையோடு சென்று கொண்டிருந்த எங்கள் கல்லூரி வாழ்க்கையை மற்றுமல்லாது வருங்காலத்தையும் இனிமையாகமாற்றிய எங்கள் ராதை மேடத்துக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இவர்களைப் பற்றி பின்பு தனி இடுகையில் சொல்கிறேன்.

அதிலிருந்துதான் நாம் ஜெயிக்க வேண்டியது நம்மைதான் வெளியில் உள்ளவர்களை அல்ல என்பதை உணர்ந்து கொண்டேன். ஆமாம் நண்பர்களே இறைவன் நாடினால் எனது முந்தைய இடுகைகளை விட சிறந்த இடுகைகளை உங்களுக்கு நான் அளிப்பேன். அதுதான் நீங்கள் கொடுக்கும் ஆதரவுக்கு நான் செய்யும் கைமாறு.

எல்லா புகழும் இறைவனுக்கே.


,

இதையும் விரும்புவீர்கள்.

Related Posts with Thumbnails