Sunday, November 28, 2010

மதிப்பிற்குரிய பொ .ம . ராசமணி அவர்கள் !

நாங்கள் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம். விடுமுறை நாளில் பள்ளியில் நடந்த ஒரு விழாவிற்கு சிறப்பு பேச்சாளர் ஒருவரை பாளையங்கோட்டையில் இருந்து அழைத்து வந்திருந்தனர்.

பொதுவாகவே இதுமாதிரி நிகழ்ச்சிகளை முடிந்தவரை தவிர்த்துவிட்டு கிரிக்கெட் விளையாட சென்று விடுவது வழக்கம்.ஆனால் எங்கள் தமிழாசிரியர் "வருபவர் பேசினால் நேரம் போவதே தெரியாது அவ்வளவு இனிமையா இருக்கும் யாரும் வராமல் இருக்கவேண்டாம் " என்று கேட்டுக் கொண்டதற்கிண‌ங்க அன்று காலை அனைவரும் ஆஜரானோம். பேச்சாளர் வந்தவுடன் விழா ஆரம்பமானது.

இப்போது இங்கு சிறப்பு விருந்தினராக வந்திருப்பவர்க்கு பெரிய அறிமுகம் தேவையில்லை. மக்களின் சிந்தனையைத்தூண்டும் விதமாக நகைச்சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் பல மேடைகளிலும் , வானொலியிலும் பேசி இருக்கிறார் அண்ணன் பொ.ம.ராசமணி அவர்கள். அவர்களை சிறப்புரை ஆற்றுமாறு அழைக்கிறேன் என தமிழாசிரியர் அறிமுகப்படுத்தினார்.

உண்மையிலேயே ஆசிரியர் சொன்னது போல் அந்த ஒரு மணி நேரம் அவர் பேசிய பேச்சு வாழ்க்கையில் மறக்க முடியாததாக அமைந்தது. அவர் சொன்ன சிறந்த ஜோக்குகள் ஏற்கனவே என் அப்பா சொல்லி கேட்டவையாக இருந்தது.

வீட்டுக்கு வந்தவுடன் அப்பாவிடம் சொன்னேன். அதற்கு அப்பா " அந்த ஜோக்குகள் அனைத்தும் அவர் பேசியதிலிருந்து கேட்டு சொன்னதுதான்" என்று சொன்னபோது அவரின் அருமையை உணர்ந்தேன். அவர் பேச்சாளர் மட்டுமல்ல பல நல்ல நூல்களை எழுதிய எழுத்தாளர் என்று பின்பு வந்த நாட்களில் அவரைப்பற்றி அறிந்துகொண்டேன்.

சமீபத்தில் பா.ரா வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டபோது அண்ணன் ஜெரி ஈசானந்தாவை சந்தித்தேன். பதிவுலகம் பற்றிய பேச்சு வந்தபோது , நீங்கள் ஏன் நெல்லை பதிவர்களை வைத்து மீட்டிங் போடக்கூடாது எனக்கேட்டார். யாரெல்லாம் இருக்கிறார்கள் எனக்கேட்டபோது, நம்ம சித்ரா போன்றவர்களை வைத்து ஆரம்பிக்கலாமே என்று சொன்னவர். மேலும் ஒரு சந்தோச தகவலை சொன்னார். சித்ராவின் அப்பா பெரிய பேச்சாளர் என்று.

யாரெனக் கேட்டபோது சொன்னார். த கிரேட் பொ.ம.ராசமணி. எனக்கு சந்தோசத்தில் தலை கால் புரியவில்லை. ராசமணி சார் பொண்ணா அவங்க என ஆச்சரியப்பட்டேன். அப்போது நினைத்துக்கொண்டேன் அவரின் பக்குவப்பட்ட எழுத்துக்கள் எங்கிருந்து வந்திருக்கும் என்று.

அன்றிலிருந்தே இந்த விசயத்தை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல் இருந்து கொண்டே இருந்தது. சரி சித்ராவிடம் ஒரு வார்த்தை கேட்டு விட்டு தெரியப்படுத்தலாம் என்றிருந்தேன். இன்று காலை அவரின் பதிவைப் பார்த்த போதுதான் தெரிந்தது. இன்று ராசமணி சாரின் முதலாமாண்டு நினைவு தினம் என்று.

அந்த சிறந்த மனிதருக்கு உங்களுடன் சேர்ந்து எங்களது அஞ்சலிகளை செலுத்துகிறோம் சித்ரா. தந்தை விட்ட இடத்திலிருந்து நீங்கள் தொடங்கி மென்மேலும் புகழடைய வாழ்த்துகிறோம்.

,

இதையும் விரும்புவீர்கள்.

Related Posts with Thumbnails