Monday, March 21, 2011

குறை ஒன்றும் இல்லை ஸ்டார்ஜன்!

சேக் மைதீன் ஊருக்கு சென்று இரண்டு மாதம் முடியப்போகிறது. இதோ நேற்றுதான் ஏர்போர்ட் சென்று அழைத்து வந்தது போல நினைவு அதற்குள் ஐந்து வருடம் முடிந்து விட்டது. ஒன்றாகவே சமைத்து, ஒன்றாக சாப்பிட்டு, ஒரே ரூமில் நண்பர்களுடன் உறங்கிய அந்த இனிய நாட்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன.

நெல்லையில் போதுமான வருமானம் இல்லாததால் நான் சென்னை வந்து பணிபுரிந்து நான்காண்டுகள் கடந்த நிலையில் தம்பி சவுதி இருந்து விசா அனுப்பினான்.அதில் சவுதி வந்து கம்ப்யூட்டர் ஷோரூமில் பணியில் சேர்ந்தேன்.

வந்து ரெண்டு வருஷம் கழிஞ்ச பிறகு ஊருக்கு போக ஓனரிடம் கேட்டால் ஆள் கிடைக்கட்டும் பிறகு போகலாம் என்றார். இவரு ஆள் பார்த்து நாம என்னிக்கு போறது என்ற நினைப்புல இருந்தப்ப தான் எனக்கு ஒரு யோசனை தோணிச்சு. "பேசாம நம்ம ஆளு ஒருத்தனை கொண்டு வந்தா என்ன? ஊருக்கு போயிட்டு வந்த பிறகும் ஒத்தாசையா இருப்பான்ல " என எண்ணி ஓனரிடம் விசா கேட்டேன். அவரும் எடுத்துத்தந்தார்.

கூடப்படிச்சவனை கூப்பிட்டால் அவன் வரமுடியாத சூழல். எனக்கு சேக் மைதீன் ஞாபகம் வந்தது. ஆனால் அவன் பி எஸ் சி கெமிஸ்ட்ரி இங்க வந்து எப்படி சமாளிப்பான்? என குழப்பமாக இருந்தது. அதனாலென்ன ஒரு மூணு மாசம் ஹார்டுவேர் டிரைனிங் ஊர்ல எடுத்துட்டா போவுது என எண்ணி ரிஸ்க் எடுக்க தயாரானேன். மாப்ளையையும் சும்மா சொல்லக்கூடாது அவனும் சரின்னு சொல்லி படிக்க ஆரம்பிச்சான்.

ஒரு வழியா மூணுமாசம் கழிச்சு சவுதி வந்து சேர்ந்தான். வந்த ரெண்டு நாள்ல அவனிடம் ஊரில் என்ன சொல்லிக்கொடுத்தாங்கன்னு கேட்டு நானும் சில புதிய விசயங்களை சொன்னேன். ஏன்னா ஓனர் கேட்கும் போது எதுவும் தப்பா சொல்லிடக்கூடாதுல்ல. எல்லா கேள்விக்கும் டாண் டாண்னு பதில் சொன்னான். நானும் ரூமில் கிடந்த கம்ப்யூட்டரை பிரித்து காட்டி எப்படி மாட்டுவது என்பது முதற்கொண்டு, என்னென்ன பார்ட்ஸ் மார்க்கெட்டில் இருக்கிறது என்பது வரை சொல்லிக்கொடுத்தேன். ரெண்டே நாளில் ஹார்டுவேர் கற்ற பெருமை பெற்றான் சேக் மைதீன்.

மறுநாள் ஓனர் முன் ஆஜர் படுத்தினேன். அவர் வேறொன்னும் கேட்கலை பாஸ்! டிவைஸ் மேனஜருக்கு எப்படி போகனும்னு கேட்டார். நம்மாளும் ரொம்ப ஈசியா "மை கம்ப்யூட்டரை ரைட் கிளிக் பண்ணி ப்ராப்பர்டீஸ் போய் அதுல ஹார்டுவேர் டேப்பை கிளிக் பண்ணி டிவைஸ் மேனேஜர் பட்டனை தட்டணும்" அப்படின்னான். எனக்கு மனசுக்குள்ளே சந்தோசம் "நண்பேண்டா" என நினைத்துக்கொண்டு நிற்கும் போது அடுத்த ஏவுகணையை வீசினார் ஓனர் " எங்கே போய் காட்டு " . நம்மாளும் தைரியமா மௌஸை பிடிச்சு மை கம்ம்ப்யூட்டர் பக்கம் நகர்த்தினான் நகர்த்தினான் நகர்த்திக்கொண்டே இருக்கான். அவன் நடுவுக்கு இழுத்தால் மௌஸ் கரைக்கு ஒதுங்குது. எனக்கு பயங்கர ஷாக்.

ஓனர் ஒற்றை வரியில் சொன்னார் "இவனுக்கு கம்ப்யூட்டர் தெரியாது". வந்த புதுசில்லையா அதனால கொஞ்சம் நெர்வசா இருக்கான் இன்னும் ஒரு வாரத்தில் சரியாகிடுவான் என கொஞ்சம் நாளை நீட்டினேன். அவரும் பார்க்கலாம் என சொல்லிட்டு போயிட்டார் . நான் சேக்கிடம் கேட்டேன். ஆமா ஊர்ல எல்லாம் படிச்சேன்னு சொன்னிய? ஆமா மக்கா எல்லாம் படிச்சேன் எதைக்கேட்டாலும் சொல்லுவேன். ஆனா கம்ப்யூட்டரை ஆபரேட் பண்ண கத்து தரலை எல்லாம் தியரிதான்னு குண்டைத்தூக்கி போட்டான்.

இந்த இடத்தில் சேக் மைதீனைப் பற்றி ஒன்று சொல்லியாக வேண்டும். சேக் மைதீன் எனக்கு நண்பன் மட்டுமல்ல உறவினரும் கூட. எங்கள் குடும்பத்துல நாங்கதான் முதல் தலைமுறையா பட்டப்படிப்பு வரைக்கும் முடித்தவர்கள். எல்லோரும் படிப்புல சாதனை பண்ணுவாங்க நாங்க படிச்சதே சாதனைதான்! இன்னும் சொல்லப்போனால் ஓரளவு நல்லா படிச்சதுனாலதான் போனப்போகுது ஆசைப்படுறாங்க படிச்சிட்டு போகட்டும்னு வீட்ல விட்டாங்க. சின்ன வயசிலேயே பல சோதனை சமாளித்து பழகியிருந்ததால் இதையும் இன்னொரு சவாலாக எண்ணி சந்திக்க முடிவு செய்தோம்.

அந்த இடைப்பட்ட ஒரு வாரத்தில் சேக் இன்னும் கொஞ்சம் தேறியிருந்தது மனதுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. எப்படியும் சாதித்துக்காட்டுவது என்ற நம்பிக்கையில் செயல்பட்டான்.அவன் மேல் எனக்கு அதைவிட நம்பிக்கை இருந்தது. ஆனால் அதை வெளிக்காட்டாமல் அவனிடம் நான் கண்டிப்புடனே இருந்தேன். பின்னே பயம் இருந்தால்தானே எதையும் கற்றுக்கொள்ள முடியும்.

ஒரு வழியாக இரு மாதங்கள் கழிந்தபோது ஓரளவுக்கு கஷ்டமரை சமாளிக்க தெரிந்திருந்தான் அரபியும் ஓரளவு கற்றிருந்தான். இங்கு ஒரு முக்கியமான விசயம் சொல்லியாக வேண்டும். இங்கு வருபவர்கள் சந்திக்கும் முதல் பிரச்சனை மொழிதான். குறைந்தது ஆறுமாசம் ஆகும் மொழி கற்க.சேக் மைதீன் கல்லூரியிலேயே அரபி எழுத வாசிக்க கற்றிருந்ததால் அவனுக்கு பேசக்கற்றுக்கொள்வது கொஞ்சம் எளிதாக இருந்தது.

ஒரு வழியாக நானும் ஊர் போய் வந்தேன். அவன் இப்போது முழுவதுமாக தேறியிருந்தான். அதன் பின் எல்லாமே எளிதாகிப்போனது. ரெண்டு வருடம் தனியாக வேலை பார்த்து சலித்து போயிருந்த எனக்கு ஊர் திரும்பிய பின் சேக் மைதீனுடன் சேர்ந்து வேலை பார்ப்பது இனிமையாகவும் உற்சாகமாகவும் இருந்தது.

எனது தம்பி எனக்கு விசா அனுப்பியதாக சொன்னேனல்லவா அவனும் மற்றொரு தம்பியும் எங்களுக்கு அருகில் உள்ள ஊரில்தான் வேலை செய்தார்கள். குடும்பத்தை பிரிந்திருக்கும் எங்களுக்கு வாரா வாரம் வெள்ளியன்று ஒன்று கூடுவதுதான் ஒரு பெரிய ஆறுதலாகவும் மகிழ்ச்சி அளிக்க கூடியதாகவும் இருந்தது. எங்களிடத்தில் சேக் மைதீன் எப்போதுமே பிரியமாக இருப்பான். அதுவும் என் தம்பிகளிடத்தில் கூடுதல் பாசம்.

இங்கணம் சவுதி வாழ்க்கை கழிந்து கொண்டிருந்த நிலையில்தான் எங்கள் கடையில் ப்ராட்பாண்ட் கனெக்ஷன் வந்தது. ஆரம்பத்தில் தமிழ் செய்திகளை மட்டும் படித்துக்கொண்டிருந்த எங்களுக்கு தமிழ்மணம் அறிமுகம் ஆனது. குறிப்பிட்ட செய்திகளை மட்டுமே கொடுக்கும் இணைய இதழ்களுக்கு மத்தியில் வலைப்பூக்களில் வரும் பகிங்கிரமான கருத்துக்களும் வெளிப்படையான விவாதங்களும் எங்களை மிகவும் கவர்ந்தன.

ஆரம்பத்தில் பின்னூட்ட பதிவராக இருந்த நாங்கள் முரளிக்கண்ணன் கோவிக்கண்ணன் ஆகிய இரு அண்ணன்கள் தந்த ஊக்கத்தால் பதிவெழுதி பார்க்கும் முடிவுக்கு வந்தோம். சேக் மைதீன் ஸ்டார்ஜன் ஆனான். நான் சிநேகிதன் ஆனேன். (வரலாறு ரொம்ப முக்கியம்!)

அதன் பிறகு நவாஸுதீன், பா.ரா. அண்ணன், செ.சரவணகுமார், நாடோடி ஸ்டீபன், எம்.அப்துல்காதர், இளம் தூயவன், ராஜவம்சம் என சவுதியில் எங்கள் நட்பு வட்டம் பெருகியது. அது போல் வலையுலகிலும் நட்பு பெருகியது.

இந்த காலகட்டத்தில் சேக் மைதீன் இணையத்தில் கலக்கத் துவங்கியிருந்தான். இணையத்தில் மட்டுமல்ல வேலையிலும் சிறந்து விளங்கினான். அதன் பிறகு அவனும் நானும் மாறி மாறி ஊர் சென்று வந்தோம் எந்த பிரச்சனையும் இல்லாமல். இப்படியாக நான்காண்டுகள் கழிந்தன.

ஆனால் அதன் பின் வேறொரு புதிய பிரச்சனை உருவாகியிருந்தது. எங்கள் ஏரியாவைச் சுற்றி புதிது புதிதாக பெரிய ஷாப்பிங் மால்கள் வந்துகொண்டிருந்ததால் எங்களுக்கு வேலை குறைய ஆரம்பித்திருந்தது. சர்வீஸில் வருமானம் வந்தாலும். அவர்கள் போடும் ஆஃபரில் எங்கள் சேல்ஸ் படுத்துக்கொள்ள துவங்கியிருந்தது. எப்படியோ தாக்கு பிடித்து கடை நடத்தினாலும் ஓனரால் இரண்டு பேரை வைத்து சமாளிக்க முடியாத நிலை.

சேக் மைதீனும் குடும்பஸ்தனாகி விட்டான். தற்போதைய வருமானம் போதாத சூழல். ஓனரிடம் கூடுதலாக கேட்டால் இப்போதுள்ளதை கொடுக்கவே ரொம்ப கஷ்டம் இதுக்கு மேல் எப்படி கூட்ட முடியும் என மறுத்துவிட்டார் .

நாங்கள் இருவரும் நண்பர்களுடன் ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்தோம். இந்த வேலையிலிருந்து விலகி ஊருக்கு சென்று புதிய விசாவிலோ அல்லது ஊரிலேயே நல்ல வேலை கிடைத்தாலோ அதில் சேர்ந்துகொள்வது என்று முடிவெடுத்தோம். அதன்படி தற்போது சேக் ஊருக்கு சென்றிருக்கிறான்.

ஐந்து வருட அனுபவத்துடன் அரபியும் சரளமாக தெரிவதால் இங்கு புதிய வேலை கிடைப்பது அத்தனை கடினம் கிடையாது. எவ்வளவோ சவால்களை சந்தித்தவனுக்கு இது மற்றுமொரு சவால் அவ்வளவே.

இன்ப துன்பங்களில் ஒன்றாக இருந்தவன் இப்போது பிரிந்து ஊருக்கு சென்றது மனதுக்கு மிக கஷ்டமாக இருந்தாலும் முன்னேற்றத்தின் பொருட்டு பிரிவென்பது தவிர்க்க முடியாத ஒன்று என மனதை தேற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இப்படியொரு வாழ்வை கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்தும் இந்த நேரத்தில் வருங்காலமும் இதை விட சிறப்பாக அமைய வாழ்த்துகள் சேக் மைதீன்.

41 comments:

ஹுஸைனம்மா said...

துணிவான முடிவுக்கு வாழ்த்துகள். இறைவன் அருளால் நினைத்தது நலமே நடக்கட்டும்.

//நாங்க படிச்சதே சாதனைதான்!//
உண்மைதான். (எங்கள் ஊரிலும் இப்படித்தான் நிலைமை அக்காலத்தில்)

//கஷ்டமரை//
அவ்வளவு கஷ்டமோ கஸ்டமர்களைச் சமாளிப்பது? :-)))))

எல்லாம் நல்லாருக்கு. ஆனால், ஓனரை ஏன் அவன், இவன் என்று விளித்திருக்கிறீர்கள்? என்னதான் குறைகள் இருந்தாலும் (இல்லாதவர் யார்?), மரியாதை தருவதில் என்ன தவறு? மேலும், அவர் வயதில் உங்களைவிட மூத்தவராகவே இருப்பார் என்று நினைக்கிறேன். இல்லையென்றாலும், ஒரு ஊடகத்தில் எழுதும்போது அவர் என்று சொல்வதே தன்மை. உங்கள் முதலாளி என்பதால் இல்லாமல், சக மனிதர் என்ற அளவிலாவது அவ்வாறு அழைக்கலாமே.

ஜெய்லானி said...

இன்ஷா அல்லாஹ் நல்லதே நடக்கும் :-)
என்ன இருந்தாலும் ஒன்றாக இருந்து விட்டு தனியா இருப்பது மனதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லதே நடக்கும்

Prathap Kumar S. said...

எடுத்திருப்பது பெரிய ரிஸ்க்தான். உங்கள் திறமைக்கு எல்லாம் நல்லப்படியே நடக்கும்.

நீங்க ஊருக்கு போயிருந்த சமயம் நான் நம்ம குருகிட்ட போன்பண்ணி பேசுனேன்... அவர் பதிவு மாதிரியே அவர் பேச்சும். நெல்லைத்தமிழில் பேசியது மிகவும் சாதுவான மனிதர்னு புரிஞ்சுது.


//ஹுஸைனம்மா said... எல்லாம் நல்லாருக்கு. ஆனால், ஓனரை ஏன் அவன், இவன் என்று விளித்திருக்கிறீர்கள்? என்னதான் குறைகள் இருந்தாலும்//

வழிமொழிகிறேன்....நூறு ருபாய் குடுத்தாலும் மொதலாளி மொதலாளிதான் மக்கா..:))

'பரிவை' சே.குமார் said...

உங்கள் திறமைக்கு எல்லாம் நல்லப்படியே நடக்கும்.

பா.ராஜாராம் said...
This comment has been removed by the author.
ஸாதிகா said...

//ஐந்து வருட அனுபவத்துடன் அரபியும் சரளமாக தெரிவதால் இங்கு புதிய வேலை கிடைப்பது அத்தனை கடினம் கிடையாது. எவ்வளவோ சவால்களை சந்தித்தவனுக்கு இது மற்றுமொரு சவால் அவ்வளவே.
// கண்டிப்பாக..முயற்சி திருவினையாக்கும்.

//முன்னேற்றத்தின் பொருட்டு பிரிவென்பது தவிர்க்க முடியாத ஒன்று என மனதை தேற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது.// சரியாக சொன்னீர்கள் அக்பர்.உங்களைன் ஆழந்த தூய நட்பு நெகிழ்வைத்தந்த்து.

பா.ராஜாராம் said...

கண்கள் கலங்கியது அக்பர்...எதுக்குன்னு தெரியல. தெரியவும் வேணாம். எதுக்குன்னே தெரியாமல் கலங்குவோமே, அதை அனுபவிக்கிறேன். இந்த நொடி..

எதுக்குன்னே தெரியாமல் கலங்கித்தான் இந்தப் பதிவையும் நீங்கள் எழுதி இருக்க முடியும். தட்டச்சு செய்திருக்க முடியும்.அந்த நெகிழ்வு, நண்பனின் மேல் உள்ள பரிவு, நம்பிக்கை, அன்பு, எல்லாம் அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. வரிக்கு வரி வெளிப் பட்டிருக்கிறது.

'சரவணன் ஊருக்கு கிளம்புகிறேன்' என்று சொல்லும் போதெல்லாம் நானும் இதே உணர்வை, தவிப்பை உணர்ந்து வருகிறேன். முன்பு சரவணனை அழைக்கிறது போல அழைப்பது இல்லை, இப்போதெலாம். எல்லாவற்றையும் பழகிக் கொள்ள தயாராகி வருகிறேன் போல என என்னை நானே தேற்றி வருகிறேன்.

சரி, இந்த வெக்கையில் இவ்வளவாவது கிடைத்ததே.

எங்கிருந்தால் என்ன ஸ்டார்ஜன்?. வெளிச்சமாக இருப்பீர்கள். ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும்?. .

மிஸ் யூ ஸ்டார்ஜன் என்ற என் ஷேக்!

லவ் யூ!

கலையரசன் said...

நண்பேன்டா.....

சிநேகிதன் அக்பர் said...

//எல்லாம் நல்லாருக்கு. ஆனால், ஓனரை ஏன் அவன், இவன் என்று விளித்திருக்கிறீர்கள்? என்னதான் குறைகள் இருந்தாலும் (இல்லாதவர் யார்?), மரியாதை தருவதில் என்ன தவறு? மேலும், அவர் வயதில் உங்களைவிட மூத்தவராகவே இருப்பார் என்று நினைக்கிறேன். இல்லையென்றாலும், ஒரு ஊடகத்தில் எழுதும்போது அவர் என்று சொல்வதே தன்மை. உங்கள் முதலாளி என்பதால் இல்லாமல், சக மனிதர் என்ற அளவிலாவது அவ்வாறு அழைக்கலாமே.//


உண்மையிலேயே அவர் எனக்கு ஒரு வயது குறைவானவர்தான் :)

ஆனால் நான் எழுத ஆரம்பிக்கும் போது மாரியாதையுடன் தான் ஆரம்பித்தேன். அதன் பிறகு தொடர்ச்சியாக எழுத முடியாமல் சில நாட்கள் கழித்து எழுதும்போது பேச்சு வழக்கிலேயே எழுதி விட்டேன். நானும் முதலாளியும் ஒருவரை ஒருவர் பெயர் சொல்லித்தான் அழைப்போம்.

இருப்பினும் பொதுவில் எழுதும் போது மரியாதையுடனே எழுதவேண்டும். இதுவரை அப்படித்தான் எழுதியுள்ளேன். இதை சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி ஹுஸைனம்மா.


//கஷ்டமரை//
அவ்வளவு கஷ்டமோ கஸ்டமர்களைச் சமாளிப்பது? :-)))))

சும்மா. காமெடிக்காக எழுதியது. உன்னிப்பாக கவனித்து விட்டீர்கள் :))

சிநேகிதன் அக்பர் said...

//துணிவான முடிவுக்கு வாழ்த்துகள். இறைவன் அருளால் நினைத்தது நலமே நடக்கட்டும்.//

வாழ்த்துக்கு நன்றி ஹுஸைனம்மா.

சிநேகிதன் அக்பர் said...

நன்றி ஜெய்லானி

நன்றி ராதாகிருஷ்ணன் சார்

நன்றி பிரதாப்

நன்றி குமார்

நன்றி சகோ ஸாதிகா.

settaikkaran said...

பெயருக்கேற்ற மாதிரியே ஸ்டார்ஜன் ஒரு நட்சத்திரம்போல் வலையுலகில் -சினேகிதன் என்ற பெயருக்கு நீங்கள் எப்படிப் பொருத்தமோ அது போலவே! பகிர்வுக்கு நன்றி! :-)

ராஜவம்சம் said...

உருக்கமான பதிவு நண்பா
ஷேக் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

//எல்லோரும் படிப்புல சாதனை பண்ணுவாங்க நாங்க படிச்சதே சாதனைதான்!//

சமுதாய மாற்றம் இன்ஷா அல்லா சதவிகிதம் கூடும்.

Asiya Omar said...

ஸ்டார்ஜனுக்கு எப்பவும் தம் உழைப்பின் மீது நம்பிக்கையுண்டு,இப்ப அனுபவமும் சேர்ந்து நல்ல தொரு வெற்றிக்கனியை நிச்சயம் தேடி தரும்.நண்பர்களின் பிரிவு டெம்ப்ரரி தான்,மீண்டும் நல்லதொரு பணியில் வந்து சேர்ந்து, நட்பும் என்று போல இனிக்க வாழ்த்துக்கள். ஸ்டார்ஜன்,அக்பர் நீங்கள் இருவரும் இன்னும் பல வெற்றிகளை அடைய வாழ்த்துகக்ள்.

எம் அப்துல் காதர் said...

வெறும் ஆறு மாதம் தானே. காலப் போக்கில் அதுவும் சீக்கிரம் முடிந்து விடும். தல திரும்ப 'வெற்றி' செய்தியுடன் வரட்டும். நல்ல வேளையில் சேர்த்து விட்டு விடலாம். U DONT WORRY!!

Menaga Sathia said...

நடப்பவை அனைத்தும் நன்மைக்கே....நல்லதே நடக்கும்..

குறை ஒன்றும் இல்லை !!! said...

Dont worry !!!!

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும்! சகோ. ஸ்டார்ஜன் சென்று திரும்பிவரும் நாளாச்சேன்னு அன்றுகூட நினைவு வந்தது. என் பதிவுகளுக்கு ஒற்றை வரியிலாவது வந்து கருத்து சொல்லத் தவறாத சகோக்களில் ஒருவர். விரைவில் எதிர்ப்பார்த்த வேலையும் நல்ல சம்பளமும் கிடைக்க இறைவன் உதவி செய்வானாக! விசாரித்ததாக சொல்லுங்க. பகிர்வுக்கு நன்றி சகோ.

Ahamed irshad said...

உண்மையிலேயே என்னை ரொம்ப‌ ஆழ‌மாக‌ போக‌வைத்துவிட்ட‌து இந்த‌ ப‌திவு அக்ப‌ர்.. ஹேட்ஸ் ஆஃப் மேன் ஆன் யுவ‌ர் டீப்ப‌ஸ்ட் ஃப்ர‌ண்ட்ஸ்ஷிப்..

செ.சரவணக்குமார் said...

காலையிலயே படிச்சிட்டேன் அக்பர். ஆனா எதுவும் சொல்லத்தோணலை. அப்படியே நினைவுகளை அசைபோட்டபடியே இன்று முழுவதும் வெறுமனே அறையில் இருந்தேன்.

சேக் எக்ஸிட்டில் சென்றதில் உங்கள் அளவிற்கு எனக்கும் வருத்தம் இருக்கிறது அக்பர். இந்த தீச்சூட்டிலும் தித்தித்த நாட்களை மறக்க முடியுமா?

ஸ்டார்ஜன் திரும்பி வரும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். அதற்கான முயற்சிகளிலும் இருக்கிறேன். கவலைப்பட வேண்டாம்.

நான் இங்கு வந்து சம்பாதித்ததெல்லாம் நீங்கள் மட்டும் தான்.

கடந்த இரண்டு மாதங்களாக எத்தனை எத்தனை துயரங்கள். ஒன்றும் சொல்வதற்கில்லை அக்பர். நானும்கூட எல்லாவற்றையும் பழகிக்கொள்ளத் தயாராகி வருகிறேன்.

மிஸ் யூ சேக். சீக்கிரம் வந்து கட்டிக்கோங்க.

நாடோடி said...

அக்ப‌ர் நீங்க‌ள் எழுதியிருக்கும் அனைத்தும் என்னிட‌ம் முன்ன‌மே ப‌கிர்ந்திருக்கிறீர்க‌ள்... என்னால் ஆறுத‌ல் ம‌ட்டுமே சொல்ல‌ முடிந்த‌து..

உங்க‌ள் இருவ‌ரின் ம‌ன‌திற்கு ந‌ல்ல‌தே ந‌ட‌க்கும்..

Anonymous said...

டும்டும்...டும்டும்...
டும்டும்...டும்டும்...

ஆனந்தத்தில் ஆரம்பித்து அழுகையில் முடிவது நட்பு ஒன்றுதான்.

சிநேகிதன் அக்பர் said...

//நீங்க ஊருக்கு போயிருந்த சமயம் நான் நம்ம குருகிட்ட போன்பண்ணி பேசுனேன்... அவர் பதிவு மாதிரியே அவர் பேச்சும். நெல்லைத்தமிழில் பேசியது மிகவும் சாதுவான மனிதர்னு புரிஞ்சுது.//

நீங்கள் நினைத்தது சரிதான் நாஞ்சில்.

தூயவனின் அடிமை said...

உங்கள் நட்பை அனைவருடன் பகிர்தமைக்கு மிக்க நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க பா.ரா அண்ணே

நம்ம ஆளுங்க எல்லோருமே ரொம்ப பாசக்காரங்கண்ணே.

அதுதான் அவங்களுக்கு ஒரு பிரச்சனைன்னா மனசு கேட்கமாட்டேங்குது.

சிநேகிதன் அக்பர் said...

நன்றி கலையரசன்

நன்றி சேட்டைக்காரன்

நன்றி ராஜவம்சம்

நன்றி ஆசியா உமர்

நன்றி தல அப்துல்காதர்

சிநேகிதன் அக்பர் said...

நன்றி மேனகா

நன்றி ராஜ்குமார்

நன்றி அஸ்மா. விசாரித்ததாக சொல்கிறேன்.

நன்றி இர்ஷாத்

சிநேகிதன் அக்பர் said...

நன்றி சரவணா. முயற்சி செய்வோம்

சிநேகிதன் அக்பர் said...

நன்றி ஸ்டீபன்

நன்றி நையாண்டி

நன்றி இளம் தூயவன்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

ரொம்ப நன்றி அக்பர்.. இதை படிக்கும்போது கண்கள் கலங்கி எதோ ஒன்றை இழந்தது போன்ற உணர்வு.. எனக்கு என்ன சொல்வ‌தென்றே தெரியல..

எல்லாம் நன்மைக்கே.. இன்ஷா அல்லாஹ்! நாம் வாழ்வில் வெற்றி பெறுவோம்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நலம் விசாரித்து நம்பிக்கை அளிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய நன்றிகள்

Thenammai Lakshmanan said...

நண்பர்கள் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்.. ஸ்டார்ஜனுக்கு இன்னும் நல்ல வேலை கிடைக்கவும்., உங்கள் பணியில் இன்னும் சிறப்பாக முன்னேற்றம் காணவும் வாழ்த்துக்கள் அக்பர்..:))

john danushan said...

எப்பிடிப்பா?............

கமலேஷ் said...

கலங்கடிட்சிடீங்க தோழரே. வரிகளில் உண்மையான நட்பின் உணர்வு தெறிக்கிறது.

Jerry Eshananda said...

அன்பு தம்பி..அக்பர்......மனசை பிசையும் பதிவு......நெகிழ்ந்து போனேன்.

Jaleela Kamal said...

நன்பனை பற்றி அருமையாபெருமையாக எழுதி இருக்கீஙக், அவரை விட்டு பிரிந்தது உங்களுக்கு ஒரு குறை தான் இருந்தாலும் அவர் குடும்பத்தோடு இருக்கிறார் இல்லையா, நீங்களும் சீக்கிறம் உங்கள் குடும்பத்தோடு செட்டில் ஆக என் துஆக்கள்.

Prabu M said...

ஒரே அறையில் ஒரே லேப்டாப்பைப் பகிர்ந்துகொள்ளும் இரு பதிவர்கள் அநேகமாக‌ நீங்களாகத்தான் இருந்திருப்பீர்கள்... நண்பர் ஸ்டார்ஜன் ஒருமுறை எழுதியிருந்ததாக ஞாபகம் அக்பர் தமிழ்மணத்தில் ஓட்டளித்திருந்தால் மீண்டும் தன்னால் அதே பதிவிற்கு வோட்டளிக்க முடிவதில்லை என்று! அப்போதுதான் புரிந்துகொண்டேன்!

சில விஷயங்கள் படிக்க சந்தோஷமா இருக்கும்.... சில விஷயங்களைப் படிக்க கவலையா இருக்கும் ஆனால் இரண்டுமே கலந்து ஏற்படும் உணர்வுதான் ஒரு மனநிறைவைத் தரும். இந்தப் பதிவு எனக்கு அப்படியொரு நிறைவைத் தந்தது!

முதலாளியை அவன் இவன் என்று தாங்கள் குறிப்பிட்டிருப்பதை நண்பர்கள் கவனித்து சுட்டிக்காட்டியிருப்பது ஸாரி... எனக்கு சிரிப்பைத்தான் வரவழைத்தது! என‌க்கு உறுத்த‌வில்லை அந்த‌ ந‌டை.... ஓன‌ர் என்றாலே நாற்ப‌துவ‌ய‌து ம‌திக்க‌த்த‌க்க‌ ஒரு ஸ்ட்ரிக்ட்டான‌ ஆசாமியின் பிம்ப‌ம் ம‌ன‌த்திரையில் தோன்றிவிடுவ‌துதான் கார‌ண‌மோ!

வெல்.... இந்த‌ப் ப‌திவின் த‌லைப்பு அற்புத‌ம்! நானும் ஸ்டார்ஜ‌ன் அவ‌ர்க‌ளுக்கும் உங்க‌ளுக்கும் அந்த‌த் த‌லைப்பையே ம‌றுமொழிகிறேன் ம‌ன‌மார்ந்த‌ வாழ்த்துக்க‌ளுட‌ன்! :-)

ஸ்டார்ஜ‌ன் அவ‌ர்க‌ளின் ப‌திவைப் ப‌டிக்கும்போது அவ‌ர் ரொம்ப‌ ஸ்ட்ரைட் ஃபார்வோர்ட் என்று புரியும்.... க‌டின‌ உழைப்பாளி.... அனுப‌வ‌மும் இருக்கின்ற‌து.... அப்புற‌ம் என்ன‌ பாஸ்... குறையொன்றுமில்லை!! இது ஒரு ச‌ந்தோஷ‌மான‌ பிரேக்.... நீங்க‌ளும் அடுத்து உங்க‌ Careerல் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் காண‌ வாழ்த்துக்க‌ள் ந‌ண்பா... ஸாரி.. சிநேகிதா!! ;-)

Asiya Omar said...

சகோ.அக்பர் ரொம்ப நாளாய் பதிவே போடலை...

சிநேகிதன் அக்பர் said...

என்ன ஸ்டார்ஜன் சௌக்கியமா? :)
=

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தேனக்கா.
=

நன்றி ஜான் தனுஷன். அது அப்படித்தான் :)
=

நன்றி கமலேஷ்.
=

நன்றி ஜெர்ரி அண்ணா
=

நன்றி பிரபு.எம் நீண்ட பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்துவதற்கு. பதில் சொல்லத்தான் தாமதமாகி விட்டது. மன்னிக்கவும்.
=

விரைவில் எழுதுகிறேன் ஆசியாக்கா.

Unknown said...

உங்களுக்கு எனது இனிய இல்லத்தில் அவார்டு கொடுத்திருக்கிறேன்.. பெற்றுக்கொள்ள வாருங்கள்.. http://en-iniyaillam.blogspot.com/2011/04/blog-post_22.html

என்றும் நட்புடன் உங்கள்

சிநேகிதி

இதையும் விரும்புவீர்கள்.

Related Posts with Thumbnails