இங்குள்ள சவுதிகள் ( நாம் இந்தியர்கள் என்பது போல் அவர்கள் சவுதிகள் ) பெருமையாக சொல்லிக்கொள்வார்கள், உன் காலுக்கு அடியில் தோண்டினால் தண்ணீர் வராது பெட்ரோல்தான் வரும் என்று.
அந்த வளம்தான் அவர்களை பணக்கார நாடுகளின் வரிசையில் இன்றும் வைத்திருக்கிறது. நமக்கு வேலை வாய்ப்பையும் அளித்திருக்கிறது.
ஆனால் இவ்வளவு வசதியிருந்தும் அவர்கள் ஏங்குவது எதற்கு தெரியுமா? இயற்கைக்கு.
ஆம் இங்கு நம் நாட்டை போல் பச்சை பசேலென புல்வெளிகளோ, அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுகளோ எதுவுமே கிடையாது. பேரிச்சம் மரங்களும் ஒரு சில ஏரியாவில்தான் நன்கு வளர்கின்றன.
வருடத்திற்கு 5 நாட்கள் அல்லது பத்து நாட்கள் மழை பெய்யும் அதுவும் ஒரு சில வருடங்கள் பெய்யாது. மழை நேரங்களில் யாரிடமாவது என்ன இப்படி ஒரே நசநசன்னு சொல்லிவிட்டால் போதும் அவர்களுக்கு கோபம் வந்து விடும். அப்படி சொல்லக் கூடாது, மழை இறைவனின் அருட்கொடை இன்னும் நிறைய பெய்யட்டும். அதுதான் நல்லது என்பார்கள்.
இங்கு ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 6 ரூபாய் ஆனால் ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீரின் விலை 24 ரூபாய். வீட்டிற்கு வந்து சப்ளை செய்பவர்களிடம் வேண்டுமானால் விலை குறைவாக இருக்கும்.
அவர்களுக்கு இந்தியாவை மிகவும் பிடிக்கும். காரணம் இங்குள்ள இயற்கை வளங்கள். மூணாறு பற்றியும் ஊட்டி பற்றியும் நிறைய சவுதிகள் பெருமையாக பேச கேட்டிருக்கிறேன்.
போலவே சவுதி அரசும் செயற்கையாக இயற்கையை உருவாக்கி வருகிறது இது போல


இந்த கார்டன் அமைக்க ஆன செலவு மட்டும் 5 கோடி (தோராயமாக)இருக்கும். அனைத்தும் செயற்கை புல்வெளிகள். தினமும் இரு வேளை நீர் தெளிக்க பைப் வசதிகள் என்று மிக அழகாக திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறார்கள்.
இதை திறந்து 2 மாதமாகிறது. தினமும் மாலையில் இருந்து இரவு 12 மணிவரை கூட்டம் கூட்டமாக ஏசி வீட்டை விட்டு இங்கு வந்து இளைப்பாறுகிறார்கள்.
மேலும் ரோட்டிற்கு நடுவே இது போல மரங்களை நட்டு தினமும் லாரிகள் மூலம் நீர் பாய்ச்சுகிறார்கள்.

ஏதாவது தருணத்தில் விபத்து ஏற்பட்டு இந்த மரங்கள் ஒடிந்தால் ஒரு மரத்திற்கு ஒரு லட்சத்தி இருபதாயிரம் ரூபாய் வீதம் அவரிடம் அபராதம் விதிக்கப்படும்.
காய்க்காத, நிழல்தராத அந்த மரத்திற்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்திலிருந்து தெரிந்திருக்கும் இயற்கைக்கு எவ்வளவு ஏங்குகிறார்கள் என்று.
ஆனால் நாம்?
இருக்கிற இயற்கை வளங்களை அழித்து கான்க்ரீட் காடுகளாக்கிக் கொண்டு இருக்கிறோம்.
நடுத்தர மற்றும் ஏழை வர்க்கத்தினர் மரங்கள் வளர்க்காவிட்டாலும் மரங்களை அழித்து நான் பார்த்ததில்லை. ஆனால் வேலியே பயிரை மேய்ந்த கதையாக அதிகாரத்தில் இருப்பவர்களால்தான் இயற்கை வளங்கள் அதிகமாக சுரண்டப்படுகிறது.
இந்த பூமிக்கு நம்மாலான சிறிய உதவி அல்லது கடமை. வாழ் நாளில் ஒரு மரமாவது நட்டு, பெரிதாக வளரும் வரை அதை பராமரிப்பதுதான்.
என்னதான் சொர்க்கத்தில் இருந்தாலும். அதை சொர்க்கம் என்று உணராதவரை ஒரு பயனும் இல்லை.
,