Wednesday, December 15, 2010

சவுதி அரேபியா !

சகோதரர் எம்.அப்துல்காதர் சவுதியை பற்றி ஒரு இடுகை எழுதியிருந்தார். இன்னும் சொல்வதற்கு நிறைய விசயங்கள் இருக்கிறதே என கேட்டதற்கு, அதையே தொடர்பதிவாக எழுத அழைத்து விட்டார். அவருக்கு எனது நன்றிகள்.

சொல்வதற்கு நிறைய விசயங்கள் இருந்தாலும், சவுதியில் நான் இருக்கும் பகுதியின் அடிப்படை வசதிகளைப் பற்றி உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

பல தலைமுறைகளாக இங்கு மன்னராட்சிதான் நடக்கிறது.

இதனால் இங்கு சுவற்றில் எழுதுவது, போஸ்டர் அடித்து ஒட்டுவது, பேனர்கள் வைப்பது, போராட்டம், பொதுக்கூட்டம், ஊர்வலம் என நமது ஜனநாயக கடமைகளை இங்கு ஆற்ற முடியாது. எல்லாவற்றிற்கும் தடை.ஆள்பவர்களை விமர்சனம் செய்ய முடியாது.

பத்திரிகைகள் முதற்கொண்டு தணிக்கை செய்த பிறகே வெளிவருகிறது.

என்னதான் அடக்குமுறைகள் செய்தாலும், ஜனநாயகம் என்ற பெயரில் சர்வாதிகாரம் செய்து மக்களை கொள்ளையடிப்பதை விட மன்னராட்சி மூலம் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது மேலாக தெரிகிறது. எந்த வகையான ஆட்சி முறையாக இருந்தாலும் ஆள்பவரை பொருத்துதான் மக்களுக்கு நன்மையும் தீமையும் நடக்கும் போலும்.

அப்படி பார்க்கையில், சவுதி அரசு மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அருமையாகவே செய்து கொடுத்துள்ளது. நீங்கள் சவுதி பிரஜையாக இருந்து ஓரளவு நன்றாக படிப்பவராக இருந்தால், நீங்கள் அமெரிக்காவில் சென்று படிக்க ஆகும் செலவையும் அரசே ஏற்றுக்கொள்கிற‌து.

அனைத்து மக்களுக்கும் ஒரே கல்வி முறைதான். தமிழ் வழி, ஆங்கில வழி என பகல் கொள்ளைகள் இல்லை.

இங்கு முதலில் பாராட்டவேண்டிய விசயம் தண்ணீர்!. நான் இங்கிருக்கும் இந்த ஏழு வருடத்தில் ஒரு முறை கூட தண்ணீர் பிரச்சனை வந்ததே இல்லை. கடலில் இருந்து எடுத்து சுத்திகரிப்பு செய்து கொடுக்கிறார்கள் என்பதை நம்ப முடியவில்லை. அவ்வளவு சுத்தமாக இருக்கிறது.இங்கு இதை ஸ்வீட் வாட்டர் என அழைக்கிறார்கள்.

இங்குள்ள போலீஸ் அதிகாரிகளை பற்றி சொல்லியே ஆகவேண்டும். யாரை விசாரித்தாலும் முதலில் ஒருவருக்கொருவர் ஸலாம் சொல்லி நலம் விசாரித்துக்கொண்டு பின்புதான் பிரச்சனையைப் பற்றி பேசுவார்கள். மிரட்டுவது, லஞ்சம் கேட்பது போன்றவை பெரும்பாலும் இல்லை. கடைகளில் மாமூல் கேட்பது, சலுகை எதிர்ப்பார்ப்பது போன்றவை சுத்தமாக இல்லை.

அதுபோல இங்குள்ள ஹோட்டல்கள், ரெஸ்டாரெண்டுகளை கண்காணிப்பதற்கென்றே இருக்கும் அதிகாரிகள். ஒரு சிறு அசுத்தம் இருந்தாலும் ஃபைன் போட்டு விடுகிறார்கள். தொடர்ந்து அது போல் இருந்தால் உரிமத்தை ரத்து செய்து விடுகிறார்கள். இந்த விசயத்தில் அரசு கடுமையான விதிகளை பின்பற்றுகிறது.

பக்காலா என்று சொல்லப்படும் சூப்பர் மார்க்கெட்டுகளிலும் இது போன்று கடுமையான சட்டங்களை பின்பற்றுவதால் தரம் குறைந்த பொருட்கள் விற்பதற்கு வாய்ப்பு இல்லை. அனைத்து பொருட்களின் மீதும் காலாவதியாகும் நாள் குறிப்பிடப் பட்டிருக்கிறது. மேலும் இதில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு வருடாவருடம் மருத்துவ பரிசோதனை செய்து தகுதியிருந்தால் மட்டுமே பணி செய்ய அனுமதிக்கிறார்கள்.

சலூன் கடைகளுக்கும் இந்த விதிகள் பொருந்தும் அது போக ஒருவருக்கு செய்யும் கருவிகளை ஸ்டெரிலைஸ் செய்த பிறகே அடுத்தவருக்கு செய்ய‌ வேண்டும். ஒருமுறை மட்டுமே பயன்படுத்த கூடிய கத்திகளையே உபயோகிக்க வேண்டும் . வெள்ளை உடுப்புதான் உடுத்த வேண்டும். மீறினால் அபராதம், உரிமம் ரத்து என்று மக்கள் சுகாதாரம் சம்மந்தப்பட்ட விசயங்களில் முழு அக்கறை எடுக்கிறார்கள்.

சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படுவதால் ரௌடியிஸம், கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றங்களை செய்ய மக்கள் பயந்தே உள்ளனர். ஏனெனில் நமது நாட்டை போல் பணம் கொடுத்து சட்டத்தை விலைக்கு வாங்க முடியாது.

எல்லா வெளிநாடுகளைப் போலவே இங்கும் மலையாளிகளே அனைத்து வேலைகளிலும் அதிகமாக இருக்கிறார்கள். என்னதான் அவர்களை பற்றி ஆயிரம் குறைகள் சொன்னாலும் ஒற்றுமையிலும், சுத்தமாக இருப்பதிலும், துணிச்சலிலும், பிரச்சனை ஏற்படும் போது உதவுவதிலும் ஒரு அடி முன்னே நிற்கிறார்கள்.

நம்ப வைத்து கழுத்தருப்பவன் மலையாளி என்று சொன்னாலும் அதையும் தாண்டி அவர்களிடம் திறமை இருக்கிறது என்பது எனது கருத்து. ( இது பற்றி விரிவாக எழுத‌ இந்த இடுகை போதாது. பின்னொரு முறை பேசலாம்)

நம்மூரைப் போலவே சவுதியில் உள்ளவர்களிடமும் ஆங்கிலத்தில் பேசினால் சைலண்ட் ஆகி விடுவார்கள். ஓரளவு ஆங்கிலம் தெரிந்தவர்கள், பிறர் முன்பு நம்மிடத்தில் ஆங்கிலத்தில் பேசி பெருமை பட்டுக்கொள்வார்கள்.

இங்கு விருந்தோம்பல் மிகச் சிறப்பாக இருக்கும். அனைவருடனும் சேர்ந்து அமர்ந்து சாப்பிடுவார்கள் பேதம் பார்ப்பதில்லை. செஹ‌ன் எனப்படும் பெரிய தட்டுகளில் நான்கைந்து பேர் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது மிக அழகாக இருக்கும்.

இங்கும் கஷ்டப்படுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், பட்டினி கிடந்தாலும்,யாரும் பிச்சை எடுப்பதில்லை. முடிந்தவரை உழைத்து சாப்பிடுகிறார்கள். அவர்களுக்கு தேவையானதை அவர்களை சுற்றியுள்ள பணக்காரர்கள் நடத்தும் சமுதாய நல அமைப்புகள் செய்து கொடுத்து அவர்களது வறுமையை போக்குகிறார்கள்.

இங்கு நல்ல விசயங்கள் பல இருந்தாலும், குறைகளும் இல்லாமல் இல்லை.

ரோட்டோரத்தில் செல்லும் போது காரிலிருந்து பெப்ஸி டின் போன்ற பொருட்களை தூக்கி எறிவது, நம் மேல் எச்சில் துப்புவது. திடீரென கார் கதவை திறந்து இடிப்பது போன்ற அபாயகரமான வேலைகளில் இங்குள்ள பதின்ம வயதினரே ஈடுபடுகின்றனர். பெரியவர்கள் இது போன்ற காரியங்களை ஆதரிப்பதில்லை.

கூட்டி வந்த பணியாளர்களை கொடுமைப்படுத்துவது, ஊருக்கு அனுப்ப மறுப்பது, சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றுவது என ஆங்காங்கே சில இடங்களில் நடக்கிறது. அதுவும் எங்களைப்போல் கடைகளில் வேலை செய்யாமல் கண்ஸ்ட்ரக்ஷ்ன், ரோடு பணிகளில் உள்ளவர்கள் நிறைய கஷ்டங்கள் படுகிறார்கள்.இவன் சாதாரண வேலைக்காரன் தானே என்ற முதலாளித்துவ மனோபாவம் இல்லாமல் இல்லை.

இன்னும் சொல்வதற்கு நிறைய இருந்தாலும் பதிவின் நீளம் கருதி முடித்துக்கொள்கிறேன். இது போன்ற தங்களின் வெளி நாட்டு வாழ்க்கை அனுபவத்தையும் எழுதலாமே நண்பர்களே!

,

56 comments:

ஹுஸைனம்மா said...

நல்லாச் சொல்லிருக்கீங்க அக்பர். நம்மைப் போன்றவர்களை இங்கே கட்டிப்போட்டு வைத்திருப்பதே இங்குள்ள சுத்தம், சுகாதாரம், பாதுகாப்பு போன்ற விஷயங்கள்தான்.

Anonymous said...

நல்லா சொல்லியிருக்கீங்க பாஸ்!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

மிகவும் சரியாக சொல்லிருக்கீங்க சகோதரர் அக்பர்.

//அபாயகரமான வேலைகளில் இங்குள்ள பதின்ம வயதினரே ஈடுபடுகின்றனர்.//---இதுதான் நான் மிகவும் பயப்படுவது. இந்த பயத்தில் நமது மற்றும் சவுதியின் எதிர்காலம் அடங்கியுள்ளது.

அதேநேரம் எல்லா சிறுவர்களும் அப்படியல்ல. மிகச்சிறந்த ஒழுக்கசீலர்களாகவும் பல சவூதி சிறார்களை கண்டதுண்டு- இது ஆறுதல்.

Prathap Kumar S. said...

இங்கே எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு விசயம்... பாதுகாப்பு... எவ்ளோ பெரிய வில்லாவிலும் யாரும் தனியாக இருந்துவிடலாம். ஏமாற்றுபவர்கள் உண்டே தவிர, திருட்டுபயம் இல்லை.
இது அனேகமாக அனைத்து வளைகுடா நாடுகளுக்கும் பொருந்தும்...

சின்னவயசுலேருந்து சவுதினாலே நடுரோட்டுல தலையைவெட்டுறதுதான் ஞாபகத்துக்கு வருது...
சவுதிபேரை கேட்டாலே எனக்கு திகிலடிக்கும்.... :))

துளசி கோபால் said...

நல்லது கெட்டதுன்னு பாரபட்சமில்லாமல் விவரிச்சுச் சொல்லி இருக்கீங்க. இனிய பாராட்டுகள்.


நம்மூரில் ஜனநாயக மன்னர் ஆட்சி நடக்குதுங்க:-))))

Thenammai Lakshmanan said...

எனக்கும் ஷார்ஜா., துபாயின் சுத்தம் ., பெரிய ஷாப்பிங் மால்கள் பிடித்து இருந்தது அக்பர்.. ஆனால் காஸ்ட் ஆஃப் லிவிங் அதிகம்..

RAZIN ABDUL RAHMAN said...

சகோ அக்பர்.ஸலாம்.சவுதி என்றல்ல,பொதுவாக தாங்கள் சொன்ன கருத்துக்களில் பெரும்பான்மை, வளைகுடா நாடுகளுக்கு பொருந்தும். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் பெண்கள் பாதுகாப்பு.அதற்காக அனைவரும் உத்தமபுத்திரர்கள் என சொல்லிட முடியாது.அப்பாதுகாப்பு இங்குள்ள கடுமையான தண்டனைகளாலே தவிர சாத்தியம் இல்லை.

எல்லோரும் மனிதர்களே,நல்லவனானாலும்,தவறு செய்ய வாய்ப்பு இருந்தால் லேசாக நூல்விட்டு பார்க்க,ஷெய்த்தான் தூண்டத்தான் செய்வான்.ஆனால் அதன்மூலம் தவறிழைக்கும் வாய்ப்பை தடுப்பது இந்த சட்டங்களே தவிர வேறில்லை.
விவேக் சொல்ரமாதிரி,தண்டனைகள் கடுமையானால் தான் தப்புக்கள் குறையும் என்பது உண்மையிலும் உண்மை.நம் நாட்டிலும் இதை கொண்டுவரலாம்.தண்டனைகளை கண்டு தவறிழைத்தவன் தானே பயப்படவேண்டும்.என்ன நா சொல்ரது???

இங்கு இருக்கும் அரபிகளில் ஹராத்துகள் இல்லாமல் இல்லை.அவர்களின் சில சேட்டைகளை தாங்கள் குறிப்பிட்டு இருப்பீர்கள்.அவர்களும் மிக மிக குறைவே.அவர்களும் பெண்களிடம் சேட்டை செய்து பார்த்ததில்லை.

ஒரு பெண் கம்ப்ளைண்ட் செய்து விட்டால்,கேள்விகணக்கே இல்லாமல் தூக்கிவிடுவார்கள்.

மற்றபடி சவுதியில் பெண்களுக்கு,ஆடை வரைமுறை இருக்கும்,இது பலருக்கு சௌகர்யத்தையும், சிலருக்கு,அசௌகர்யத்தையும் தருகிறது.இருந்தாலும் அதன் நன்மை பெரிது,,,

ஆனால் இங்கு துபாயில் அந்த கட்டுப்பாடு கிடையவே கிடையாது... வக்கிரமான ஆடை அணிந்துவந்தாலும், யாரும் கேட்பதில்லை.இங்குள்ள கசப்பான விஷயங்களில் இதுவும் ஒன்று..

அன்புடன்
ரஜின்

சிநேகிதன் அக்பர் said...

வாங்க ஹுஸைனம்மா

நீங்க சொல்வது போல் வளைகுடா நாடுகளில் அடிப்படை கட்டமைப்பு அருமை.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க Balaji saravana

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க முஹம்மத் ஆஷிக்

அதே சிறுவர்கள் பெரியவர்களாகும் போது தங்களது தவறுகளை உணர்ந்து விடுவது சிறப்பு.

எல்லா இடங்களிலும் நல்லதும் கெட்டதும் சேர்ந்து தானே இருக்கு.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க நாஞ்சில் பிரதாப்

உண்மைதான் நாஞ்சில். அது போக எல்லா விசயங்களுக்கும் தலை வெட்டுவதில்லை.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க தேனக்கா

சவுதியில் காஸ்ட் ஆஃப் லிவிங் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது மிக குறைவு.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க துளசி கோபால்

//நம்மூரில் ஜனநாயக மன்னர் ஆட்சி நடக்குதுங்க:-))))//

சரியா சொன்னீங்க.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க RAZIN ABDUL RAHMAN

விரிவான உங்கள் கருத்துக்கு மகிழ்ச்சி.

தண்டனைகள் கடுமையாக்கல், அதிகாரிகளின் நேர்மை இரண்டும் முக்கியம். அது இது போல் ஒரு கட்சி ஆட்சி முறையில் தான் சாத்தியம் என நினைக்கிறேன்.

கண்ணியமான ஆடைகள் உடுத்தும் ஆண்களும் , பெண்களும் போற்றுதலுக்குறியவர்களே.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

@ நாஞ்சில் பிரதாப்™ said...

//சவுதினாலே நடுரோட்டுல தலையைவெட்டுறதுதான் ஞாபகத்துக்கு வருது...சவுதிபேரை கேட்டாலே எனக்கு திகிலடிக்கும்//---உங்களுக்கா?...ஏன்?

கொலை, கற்பழிப்பு, போதை மருந்து கடத்தல், விபச்சாரம் புரிதல் போன்ற குற்றங்கள் புரிபவர்தானே தலைவெட்டு தண்டனை பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டும்?

...???...

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லா சொல்லியிருக்கீங்க

தல தளபதி said...

அருமையான பதிவு....

பதிவின் நீளம் அதிகமிருந்தாலும் பிற நாட்டு கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களை தெரிந்துகொள்ள பலபேர்க்கு விருப்பமுண்டு.

மனமிருந்தால் உங்கள் அனுபவங்களை இன்னும் சில பதிவுகளில் தொடரலாமே நண்பரே..
நன்றி.

எம் அப்துல் காதர் said...

பாஸ் சூப்பர்... அசத்தலா இருக்கு!! மீதிய தல Starjan (ஸ்டார்ஜன்) யும் தொடர்ந்து எழுதச் சொல்லுங்க!! வாழ்த்துகள்.

vasu balaji said...

நல்ல விளக்கத்துடன் கூடிய பகிர்வு:)

Jerry Eshananda said...

// எந்த வகையான ஆட்சி முறையாக இருந்தாலும் ஆள்பவரை பொருத்துதான் மக்களுக்கு நன்மையும் தீமையும் நடக்கும் போலும்.//
மிக சரியான கருத்து அக்பர்.

இல்யாஸ் said...

தண்ணீர் பிரச்சினை இல்லையா? அப்போ உஙக்ள் இருப்பிடம் ஜித்தா இல்லை என்பது தெரிகிறது. ஒரு முறை ஜித்தா வந்து பாருங்கள் முக்கியமா இந்தியர்கள் அதிகமா வாழும் கந்தரா மற்றும் ஷரபியா ஏரியாக்களில் வந்து பாருஙகள் தெரியும்.

இல்யாஸ் said...

test

செ.சரவணக்குமார் said...

நல்லா எழுதியிருக்கீங்க அக்பர். திருநெல்வேலி, சவுதி அரேபியான்னு பேரரசு பாணியில கலக்குறீங்க.

இன்னும் நிறைய சொல்லியிருக்கலாமே. நிறைகளை மட்டுமே சொல்லியிருக்கிறீர்களோ என்றும் தோன்றுகிறது. உங்களின் ஏழாண்டு கால சவுதி அனுபவங்களில் சிலவற்றைத் தொடர்ந்து பகிர்ந்தால் நன்றாக இருக்கும்.

ஸாதிகா said...

சுவாரஸ்யமாக கூறி இருக்கின்றீர்கள் அக்பர்.நீங்களே இன்னும் உங்கள் அனுபவத்தை எழுதலாமே இன்னும்?

Asiya Omar said...

அக்பர்,மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள்,தொடர்ந்து எழுதுங்க,இன்னும் எவ்வளவோ இருக்கே! என்னுடைய சவுதி விஜயத்தின் போதுள்ள ஏர்போர்ட் அனுபவம் வாழ்நாளில் மறக்க முடியாது.போதுமடா,திரும்பி யு.ஏ.இ வந்த பொழுது ஏதோ கட்டுபாட்டில் இருந்து சுதந்திரப் பறவையாய் வந்தது போல் இருந்தது.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம்.

அரசு said...

நம்முடய வாகனம் பிரேக்டவுன் ஆகி வழியில் நின்று விட்டால் சவுதிகள் தாமாகவே முன்வந்து நமக்கு தேவையான உதவிகளை செய்வதுண்டு.
மனிதபிமானம் சகோதரத்துவம் என்பது நமது நாட்டவர்களுக்கு வார்த்தயளவில் உள்ளது சவுதிகளுக்கு வாழ்க்கை.

Chitra said...

இங்கும் கஷ்டப்படுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், பட்டினி கிடந்தாலும்,யாரும் பிச்சை எடுப்பதில்லை. முடிந்தவரை உழைத்து சாப்பிடுகிறார்கள். அவர்களுக்கு தேவையானதை அவர்களை சுற்றியுள்ள பணக்காரர்கள் நடத்தும் சமுதாய நல அமைப்புகள் செய்து கொடுத்து அவர்களது வறுமையை போக்குகிறார்கள்.


....... Thats nice to know.

சண்முககுமார் said...

தமிழ் திரட்டி உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://tamilthirati.corank.com/

NADESAN said...

அனைத்து மக்களுக்கும் ஒரே கல்வி முறைதான். தமிழ் வழி, ஆங்கில வழி என பகல் கொள்ளைகள் இல்லை.

NALLA PATHIVU

NELLAI P. NADESAN
AMERAKAM

தூயவனின் அடிமை said...

நல்ல பகிர்வு,அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் உள்ளது.

'பரிவை' சே.குமார் said...

மிகவும் சரியாக சொல்லிருக்கீங்க அக்பர்.

ஆமினா said...

படிச்ச பிறகு நம் நாட்டில் மன்னராட்சி வந்தால் எப்படி இருக்கும்னு எண்ண தோணுது. அப்பவும் கொள்ளையடிக்க தான் பாங்களோ ?:))

நல்ல பல விஷயங்களை அறிந்துக்கொள்ள முடிந்தது.....

சூப்பர்

Unknown said...

சௌதியின் சிறப்பையும்,மன்னராட்சியின் மகத்துவத்தையும் அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள் அக்பர்

சிநேகிதன் அக்பர் said...

வாங்க முஹம்மத் ஆஷிக்

//கொலை, கற்பழிப்பு, போதை மருந்து கடத்தல், விபச்சாரம் புரிதல் போன்ற குற்றங்கள் புரிபவர்தானே தலைவெட்டு தண்டனை பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டும்?//

இந்த பயம் அனைவருக்கும் இயல்பானதுதான்.

மறு வருகைக்கு நன்றி

சிநேகிதன் அக்பர் said...

வாங்க T.V.ராதாகிருஷ்ணன் சார்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சிநேகிதன் அக்பர் said...

வாங்க தல தளபதி

கண்டிப்பாக தொடர்கிறேன்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சிநேகிதன் அக்பர் said...

வாங்க எம் அப்துல் காதர்

அடுத்து அவர் ரெடியாகிட்டு இருக்கார்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சிநேகிதன் அக்பர் said...

வாங்க வானம்பாடிகள் பாலாண்ணா

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சிநேகிதன் அக்பர் said...

வாங்க ஜெரி ஈசானந்தன் அண்ணா

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சிநேகிதன் அக்பர் said...

வாங்க இல்யாஸ்

//தண்ணீர் பிரச்சினை இல்லையா? அப்போ உஙக்ள் இருப்பிடம் ஜித்தா இல்லை என்பது தெரிகிறது. ஒரு முறை ஜித்தா வந்து பாருங்கள் முக்கியமா இந்தியர்கள் அதிகமா வாழும் கந்தரா மற்றும் ஷரபியா ஏரியாக்களில் வந்து பாருஙகள் தெரியும்.//

நாங்கள் இருப்பது அல்ஹசாவில். நான் இங்கு எழுதியிருப்பது முற்றிலும் என்னை சுற்றியுள்ள பகுதிகளை பற்றிதான் நண்பரே!

அதனால்தான் பதிவின் தொடக்கத்திலேயே

//சொல்வதற்கு நிறைய விசயங்கள் இருந்தாலும், சவுதியில் நான் இருக்கும் பகுதியின் அடிப்படை வசதிகளைப் பற்றி உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.//

என்று எழுதியுள்ளேன்.

உங்கள் கஷ்டம் புரிகிறது. விரைவில் சீராக வாழ்த்துகள்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சிநேகிதன் அக்பர் said...

வாங்க சரவணா

ஒரு ஃப்ளோல அந்த தலைப்பு வந்து விட்டது.

அப்பப்போ சவுதி வாழ்க்கையை பற்றி தொடர்ந்து எழுதுவோம்.

குறைகளையும் சொல்லியிருக்கிறேன் சரவணா. ஒரு வேளை கடைகளில் வேலைபார்ப்பதால் நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை நான் சந்திக்க வாய்ப்பில்லை.

உங்களது அனுபவங்களையும் பகிருங்கள் தல.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சிநேகிதன் அக்பர் said...

வாங்க ஸாதிகா

இடையிடையே இது போல் இன்னும் எழுதுவோம் அக்கா.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சிநேகிதன் அக்பர் said...

வாங்க ஆசியா உமர்

உங்களது அனுபவங்களையும் பகிருங்களேன்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சிநேகிதன் அக்பர் said...

வாங்க அரசு

நீங்கள் சொல்வது போல் இங்குள்ளவர்கள் நல்லவர்களே.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சிநேகிதன் அக்பர் said...

வாங்க சித்ரா

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சிநேகிதன் அக்பர் said...

வாங்க நடேச‌ன்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சிநேகிதன் அக்பர் said...

வாங்க இளம் தூயவன்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சிநேகிதன் அக்பர் said...

வாங்க சே. குமார்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சிநேகிதன் அக்பர் said...

வாங்க ஆமினா

மன்னாராட்சி வந்தாலும் இவங்கதானே ஆளபோறாங்க இதைவிட கஷ்டமாத்தான் இருக்கும்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சிநேகிதன் அக்பர் said...

வாங்க அபுல்பசர்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

சரியா கூட ,குறைவு இல்லாம நேர்மையா எழுதி இருக்கீங்க பாராட்ட வேண்டிய விஷயம். :-)
அங்கே கொடுமையான விஷயம் கடுங்குளிர் மற்றும் சூடுதான் . என்னதான் ஹீட்டர் + ஏசி இருந்தாலும் எதையையும் தாங்கும் மனம் இல்லாவிட்டால் கஷ்டம்தான்

மங்குனி அமைச்சர் said...

கேட்க்க நல்லாதான் இருக்கும் இம்கூஊம் ................... பெருமூச்சுதான் விடமுடியும்.......... நல்ல சொல்லி இருக்கீங்க , அந்நாள் அரபிகள் நீங்கள் சொன்னதை விட மிகத்திமிர் பிடித்தவர்கள் என்று கேள்விப்பட்டு உள்ளேன்

Jaleela Kamal said...

மிக அருமையாக சொல்லி இருக்கீஙக

mohamedali jinnah said...

மிகவும் அருமை.இனிய பாராட்டுகள்.

sharfu said...

good post keep it up

Jaleela Kamal said...

உங்கள் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பார்வையிடவும்.

http://blogintamil.blogspot.com/2012/09/blog-post_22.html

இதையும் விரும்புவீர்கள்.

Related Posts with Thumbnails