சொல்வதற்கு நிறைய விசயங்கள் இருந்தாலும், சவுதியில் நான் இருக்கும் பகுதியின் அடிப்படை வசதிகளைப் பற்றி உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

பல தலைமுறைகளாக இங்கு மன்னராட்சிதான் நடக்கிறது.
இதனால் இங்கு சுவற்றில் எழுதுவது, போஸ்டர் அடித்து ஒட்டுவது, பேனர்கள் வைப்பது, போராட்டம், பொதுக்கூட்டம், ஊர்வலம் என நமது ஜனநாயக கடமைகளை இங்கு ஆற்ற முடியாது. எல்லாவற்றிற்கும் தடை.ஆள்பவர்களை விமர்சனம் செய்ய முடியாது.
பத்திரிகைகள் முதற்கொண்டு தணிக்கை செய்த பிறகே வெளிவருகிறது.
என்னதான் அடக்குமுறைகள் செய்தாலும், ஜனநாயகம் என்ற பெயரில் சர்வாதிகாரம் செய்து மக்களை கொள்ளையடிப்பதை விட மன்னராட்சி மூலம் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது மேலாக தெரிகிறது. எந்த வகையான ஆட்சி முறையாக இருந்தாலும் ஆள்பவரை பொருத்துதான் மக்களுக்கு நன்மையும் தீமையும் நடக்கும் போலும்.
அப்படி பார்க்கையில், சவுதி அரசு மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அருமையாகவே செய்து கொடுத்துள்ளது. நீங்கள் சவுதி பிரஜையாக இருந்து ஓரளவு நன்றாக படிப்பவராக இருந்தால், நீங்கள் அமெரிக்காவில் சென்று படிக்க ஆகும் செலவையும் அரசே ஏற்றுக்கொள்கிறது.
அனைத்து மக்களுக்கும் ஒரே கல்வி முறைதான். தமிழ் வழி, ஆங்கில வழி என பகல் கொள்ளைகள் இல்லை.
இங்கு முதலில் பாராட்டவேண்டிய விசயம் தண்ணீர்!. நான் இங்கிருக்கும் இந்த ஏழு வருடத்தில் ஒரு முறை கூட தண்ணீர் பிரச்சனை வந்ததே இல்லை. கடலில் இருந்து எடுத்து சுத்திகரிப்பு செய்து கொடுக்கிறார்கள் என்பதை நம்ப முடியவில்லை. அவ்வளவு சுத்தமாக இருக்கிறது.இங்கு இதை ஸ்வீட் வாட்டர் என அழைக்கிறார்கள்.
இங்குள்ள போலீஸ் அதிகாரிகளை பற்றி சொல்லியே ஆகவேண்டும். யாரை விசாரித்தாலும் முதலில் ஒருவருக்கொருவர் ஸலாம் சொல்லி நலம் விசாரித்துக்கொண்டு பின்புதான் பிரச்சனையைப் பற்றி பேசுவார்கள். மிரட்டுவது, லஞ்சம் கேட்பது போன்றவை பெரும்பாலும் இல்லை. கடைகளில் மாமூல் கேட்பது, சலுகை எதிர்ப்பார்ப்பது போன்றவை சுத்தமாக இல்லை.
அதுபோல இங்குள்ள ஹோட்டல்கள், ரெஸ்டாரெண்டுகளை கண்காணிப்பதற்கென்றே இருக்கும் அதிகாரிகள். ஒரு சிறு அசுத்தம் இருந்தாலும் ஃபைன் போட்டு விடுகிறார்கள். தொடர்ந்து அது போல் இருந்தால் உரிமத்தை ரத்து செய்து விடுகிறார்கள். இந்த விசயத்தில் அரசு கடுமையான விதிகளை பின்பற்றுகிறது.
பக்காலா என்று சொல்லப்படும் சூப்பர் மார்க்கெட்டுகளிலும் இது போன்று கடுமையான சட்டங்களை பின்பற்றுவதால் தரம் குறைந்த பொருட்கள் விற்பதற்கு வாய்ப்பு இல்லை. அனைத்து பொருட்களின் மீதும் காலாவதியாகும் நாள் குறிப்பிடப் பட்டிருக்கிறது. மேலும் இதில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு வருடாவருடம் மருத்துவ பரிசோதனை செய்து தகுதியிருந்தால் மட்டுமே பணி செய்ய அனுமதிக்கிறார்கள்.
சலூன் கடைகளுக்கும் இந்த விதிகள் பொருந்தும் அது போக ஒருவருக்கு செய்யும் கருவிகளை ஸ்டெரிலைஸ் செய்த பிறகே அடுத்தவருக்கு செய்ய வேண்டும். ஒருமுறை மட்டுமே பயன்படுத்த கூடிய கத்திகளையே உபயோகிக்க வேண்டும் . வெள்ளை உடுப்புதான் உடுத்த வேண்டும். மீறினால் அபராதம், உரிமம் ரத்து என்று மக்கள் சுகாதாரம் சம்மந்தப்பட்ட விசயங்களில் முழு அக்கறை எடுக்கிறார்கள்.
சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படுவதால் ரௌடியிஸம், கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றங்களை செய்ய மக்கள் பயந்தே உள்ளனர். ஏனெனில் நமது நாட்டை போல் பணம் கொடுத்து சட்டத்தை விலைக்கு வாங்க முடியாது.
எல்லா வெளிநாடுகளைப் போலவே இங்கும் மலையாளிகளே அனைத்து வேலைகளிலும் அதிகமாக இருக்கிறார்கள். என்னதான் அவர்களை பற்றி ஆயிரம் குறைகள் சொன்னாலும் ஒற்றுமையிலும், சுத்தமாக இருப்பதிலும், துணிச்சலிலும், பிரச்சனை ஏற்படும் போது உதவுவதிலும் ஒரு அடி முன்னே நிற்கிறார்கள்.
நம்ப வைத்து கழுத்தருப்பவன் மலையாளி என்று சொன்னாலும் அதையும் தாண்டி அவர்களிடம் திறமை இருக்கிறது என்பது எனது கருத்து. ( இது பற்றி விரிவாக எழுத இந்த இடுகை போதாது. பின்னொரு முறை பேசலாம்)
நம்மூரைப் போலவே சவுதியில் உள்ளவர்களிடமும் ஆங்கிலத்தில் பேசினால் சைலண்ட் ஆகி விடுவார்கள். ஓரளவு ஆங்கிலம் தெரிந்தவர்கள், பிறர் முன்பு நம்மிடத்தில் ஆங்கிலத்தில் பேசி பெருமை பட்டுக்கொள்வார்கள்.

இங்கு விருந்தோம்பல் மிகச் சிறப்பாக இருக்கும். அனைவருடனும் சேர்ந்து அமர்ந்து சாப்பிடுவார்கள் பேதம் பார்ப்பதில்லை. செஹன் எனப்படும் பெரிய தட்டுகளில் நான்கைந்து பேர் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது மிக அழகாக இருக்கும்.
இங்கும் கஷ்டப்படுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், பட்டினி கிடந்தாலும்,யாரும் பிச்சை எடுப்பதில்லை. முடிந்தவரை உழைத்து சாப்பிடுகிறார்கள். அவர்களுக்கு தேவையானதை அவர்களை சுற்றியுள்ள பணக்காரர்கள் நடத்தும் சமுதாய நல அமைப்புகள் செய்து கொடுத்து அவர்களது வறுமையை போக்குகிறார்கள்.
இங்கு நல்ல விசயங்கள் பல இருந்தாலும், குறைகளும் இல்லாமல் இல்லை.
ரோட்டோரத்தில் செல்லும் போது காரிலிருந்து பெப்ஸி டின் போன்ற பொருட்களை தூக்கி எறிவது, நம் மேல் எச்சில் துப்புவது. திடீரென கார் கதவை திறந்து இடிப்பது போன்ற அபாயகரமான வேலைகளில் இங்குள்ள பதின்ம வயதினரே ஈடுபடுகின்றனர். பெரியவர்கள் இது போன்ற காரியங்களை ஆதரிப்பதில்லை.
கூட்டி வந்த பணியாளர்களை கொடுமைப்படுத்துவது, ஊருக்கு அனுப்ப மறுப்பது, சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றுவது என ஆங்காங்கே சில இடங்களில் நடக்கிறது. அதுவும் எங்களைப்போல் கடைகளில் வேலை செய்யாமல் கண்ஸ்ட்ரக்ஷ்ன், ரோடு பணிகளில் உள்ளவர்கள் நிறைய கஷ்டங்கள் படுகிறார்கள்.இவன் சாதாரண வேலைக்காரன் தானே என்ற முதலாளித்துவ மனோபாவம் இல்லாமல் இல்லை.
இன்னும் சொல்வதற்கு நிறைய இருந்தாலும் பதிவின் நீளம் கருதி முடித்துக்கொள்கிறேன். இது போன்ற தங்களின் வெளி நாட்டு வாழ்க்கை அனுபவத்தையும் எழுதலாமே நண்பர்களே!
,