Wednesday, May 26, 2010

பதிவுலகிற்கு நன்றி !

இந்த சுப்ரமணி இருக்கானே பயங்கர குறும்புக்காரன். எனக்கு அவனை மிகவும் பிடிக்கும். எப்பவும் யாரைப்பற்றியாவது நக்கல் பண்ணிகொண்டே இருப்பான். சமயத்தில் என்னைப் பற்றியும்.

எனக்கு ஏழாம் வகுப்பிலிருந்து அவனை தெரியும். எட்டும் என் கூடத்தான் படித்தான். ஒன்பதுக்கு புனித அந்தோனியார் பள்ளியில் இருந்து டவுனில் உள்ள சாப்டர் மேனிலைப் ப‌ள்ளியில் அடுத்த அத்தியாயத்தை தொடங்கும் போதும் எங்கள் செட்டில் இருந்தான். ஆனால் வேறொரு பிரிவில்.

ஒன்பதில் சேக்தாவூது அறிமுகமானான். கே.டி. குஞ்சுமேனை விட பெரிய ஜென்டில்மேன். நல்லா படிப்பான். ஒரே ஊர்க்காரன். பள்ளி விட்டதும் சுப்ரமணி, சேக்தாவூது, பெருமாள், சண்முக நாதன் இவர்கள் யாருடனாவது இணைந்து பஸ் ஏற செல்வேன்.

பஸ்காரர்களுக்கு எங்களை கண்டால் பாசம் அதிகம். எங்களையும் பிடிக்காது பிரேக்கும் பிடிக்காது. அதனால் அருகிலுள்ள தாலுகா ஆபிஸில் நிற்காமல். ஒரு கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் கோவில் வாசலில் போய் நிற்கும். சொந்தக்கதை, சுற்று வட்டார கதையைப்பேசி கோவில் வாசல் வரை நடப்போம். நண்பர்கள் இணைந்தால் தூரம் ஒரு பொருட்டல்லதானே.

எங்கள் வகுப்புக்கு சௌந்திரபாண்டியன் சார். சிரித்த முகம். சிரிப்பென்றால் அதிரும்படி சத்தமாக இல்லாமல் பூ மலர்வதைப்போல ஓசையில்லா சிரிப்பு. இவரே எல்லா வகுப்புக்கும் வாத்தியாராக மாட்டாரா என்று ஏங்க வைத்தவர்.

ஹிப்பி தலையுடனும் , பெல்பாட்டம் பேண்டுடனும் "சங்கர் சலீம் சைமன்" படத்தில் வரும் ஹீரோ போல இருந்த பக்கத்து வகுப்பு சாரும் என்னை மிகவும் கவர்ந்து விட்டார். எனக்கு அவரைப்பார்த்தவுடன் சிரிப்பு வந்து விடும்.

சில நாட்களில் நானும் சேக்தாவூதுவும் நல்ல நண்பர்களானோம். வகுப்பில் சேக்தாவூதுதான் எப்போதும் முதல் ராங்க். எனக்கு மட்டுமல்ல வகுப்பில் அனைவருக்கும் அவனை பிடிக்கும்.

இப்படியாக ஒன்பதை தாண்டி பத்தை தொட்டோம். அங்கு சுப்ரமணி மீண்டும் இணைந்து கொண்டான். மூவர் கூட்டணியில் அரட்டை அராஜகம் ஆரம்பமானது.

எங்களின் கணக்கு சாராக வந்தவர் வேறு யாருமல்ல அந்த ஹீரோதான். பிற்பாடு பழகும் போதுதான் தெரிந்தது அவர் உண்மையிலேயே ஹீரோ என்று அப்படி ஒரு ஆட்டிடியூட். மிக பண்பானவர். அருமையாக பாடம் நடத்துவார்.

ஆனால் வாத்தியார்களுக்கு பட்டப்பெயர் வைக்கவில்லை என்றால் அவன் என்ன மாணவன். அவருக்கும் பட்டப்பெயர் வைத்தார்கள். நாங்கள் மூவரும் பஸ் ஏறச்செல்லும் போது பலரைப்பற்றியும் பேசி கிண்டலடித்துக்கொண்டே செல்வோம்.

அப்படி பேசும் போது அன்று மாட்டியவர் கணக்கு சார். சுப்ரமணிதான் முதலில் ஆரம்பித்தான் நாங்கள் பிக்கப் செய்துகொண்டோம். அவரின் பேச்சு நடை உடை பாவணை என்று ஒன்றை விடவில்லை. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் மாதிரி. அந்த நேரம் அவர் எங்களை கடந்து சென்றது மாதிரி ஒரு ஃபீலிங்.

மறுநாள் வகுப்பில் கணக்கு நேரம் அது எங்களை கணக்கு பண்ணும் நேரம் என்பதை நாங்கள் உணர வில்லை.

வந்து உட்கார்ந்தவர். "நேத்து என்னை பற்றி பேசுன ரெண்டு பெரிய மனுஷனும் எந்திரிங்கடா" அப்படின்னார்.

வெடவெடத்து போய் விட்டது. அப்போ கடந்து சென்றது அவர்தானா?

"நீங்களா எந்திரிச்சா உங்களுக்கு நல்லது. நான் சொன்னேன்னா அப்புறம் என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது."

வேறு வழியில்லை எழும்பிவிடுவோம் என்று நினைக்கும் போது புது குழப்பம். எந்த ரெண்டு பேர் . தப்பிச்ச மூணாவது ஆள் யாரு?

இந்த தயக்கத்துக்கிடையில் சம்பந்தமேயில்லாமல் ரெண்டு பேர் எழுந்தார்கள். இருவரும் அண்ணன் தம்பிகள்

"இந்த ரெண்டு பெரிய மனுஷங்களும் என்ன செஞ்சாங்கன்னு அவங்க வாயால‌யே இப்ப சொல்லுவாங்க."

ரெண்டு பேர் கண்களிலும் தாரை தாரையாக கண்ணீர். மூச்சு கூட விடாமல் நின்றார்கள்.

"அது என்ன பாட்டுடா. ஆத்தாடி பாவாடை காத்தாடவா. ராஸ்கல் வெளியூர்னா வர மாட்டேன்னு நினைச்சீங்களா."

"இவனுங்க கெட்ட நேரம் நான் அந்த ஊர் வழியா போக வேண்டியிருந்தது. ரெண்டும் ஆத்துல குளிச்சிட்டு துண்ட தலையில போட்டுட்டு என்னை கிண்டலடிச்சுக்கிட்டே போறாங்க இடையில பாட்டு வேற. என்னை பார்த்ததும் அவனுங்க மூஞ்சி போனதை பார்க்கணுமே. "

சார்.. சார்... தெரியாம செஞ்சுட்டோம் சார். மன்னிச்சுருங்க ஸ்ஸார்.. என்று அழுதுகொண்டே சொன்னார்கள்.

"என் கிளாஸுக்கு ரெண்டு பேரும் இனி வரக்கூடாது. போங்கடா வெளியில" என்று அனுப்பி விட்டார்.

அதிலிருந்து வெளியில் எங்க சொந்த கதையைக்கூட பேசப் பயந்தோம். ஒரு வாரத்தில் நிலைமை சகஜமாகியது வழக்கம்போல கேலிப்பேச்சு தொடங்கியது. அவர்களும் மன்னிக்கப்பட்டார்கள்.

பொதுத்தேர்வில் எங்களில் சிலர் கணக்கில் சென்டம் எடுத்து அவரை கிண்டல் பண்ணியதற்கு பரிகாரம் தேடிக்கொண்டோம்.

இதுல கொடுமை என்னான்னா அந்த ரெண்டு பேர் பேசுனதுக்கு தண்டனை கொடுத்தவர். இப்போ எல்லோரும் படிக்கிற மாதிரி எழுதுற என்னை வெளியே போக சொல்ல முடியாது பாருங்க அதுதான் டைமிங்.

என்னோட நோக்கப்படி பாலிடெக்னிக்கில் சேர்ந்தேன். டாக்டராக வேண்டுமென்பதால் சேக் தாவூது ப்ளஸ் ஒன்னில் சேர்ந்தான்.

பின்பு அவன் சென்னையில் BDS படித்துக்கொண்டிருக்கும் போது ஓரிரு முறை சென்னையில் வைத்து சந்தித்தேன். டாக்டர் பட்டம் வாங்கி அதே கல்லூரியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது நான் சவுதி வந்து விட்டேன்.

போன வாரம் ஒரு பதிவில் டாக்டர் எஸ் தாவூது என்று பெயரில் ஒரு பின்னூட்டம் வந்தது.

ஒரு வேளை நம்மாளாக இருக்குமோ எனக்கேட்டேன். அவனேதான்.

ஊரில் நலம் விசாரித்து மெயில் அனுப்பினேன்.

அவனிடம் இருந்து பதில் வந்தது.

"டேய்.. நானும் சவுதில, ஜித்தால தாண்டா இருக்கேன். இங்குள்ள டெண்டல் ஹாஸ்பிடலில் டாக்டரா இருக்கேன். முடிஞ்சா சந்திப்போம்."

என்ன கொடுமை சரவணன் இது !

,

Sunday, May 23, 2010

விமான விபத்தும் அதன் பாதிப்பும்

பதிவர் சந்திப்பு இரண்டாம் பாகத்தை வெள்ளி இரவு எழுதி முடித்து விட்டு சனி காலை பதிவிட எண்ணிக்கொண்டு தூங்கி விட்டேன்.

வழக்கமாக அலாரம் வைத்துதான் படுப்பேன். காலையில் டிவி சத்தம் கேட்டு அதற்குள் மணியாகிவிட்டதா என்று விழித்து மணி பார்த்தேன் மணி எட்டு. (எட்டரைக்குத்தான் எழும்புவது வழக்கம்) ரூமிலிருக்கும் கன்னட நண்பர் பார்த்துக்கொண்டிருந்தார். நானும் பார்க்கும் போதே புரிந்து போனது ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்று.

160 பயணிகள் 6 விமான ஊழியர்களுடன் துபாயிலிருந்து மங்களூர் வந்த ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியதில் 159 பேர் பலி.

என்ற இடி விழும் செய்தியை சொன்ன போது மனசு துடித்துப்போனது.

வீட்டை விட்டு பிரிந்து சில மாதங்கள் வெளியூரில் வேலை பார்த்து ஊர் திரும்பும் போது எத்தனை ஆர்வமாயிருக்கும். அதுவே ஒரு சில வருடங்கள் கழித்து திரும்புவது எப்படியிருக்கும் என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

விமானத்திலிருந்து ஊரை ஆவலுடன் பார்த்துக்கொண்டே இன்னும் சில நொடிகளில் விமானம் தரையைத்தொடப்போகிறது. அடுத்த ஐந்து நிமிடத்தில் தாய் மண்ணில் கால் வைக்கப்போகிறோம் என்று தானே அனைவரும் நினைத்திருப்பர். கரிக்கட்டையாகப்போகிறோம் என்பதை அறியாமல்.

இந்த விபத்தில் இறந்தவர்களில் ஒருவர் தன் தாயின் இறுதிச்சடங்குக்காக ஊர் திரும்பியவர். மற்றொருவர் அடுத்த மாதம் முதல் வாரம் நடக்கவிருக்கும் தனது திருமணத்துக்காக நாடு திரும்பியவர். இவர்களைப்போல ஒவ்வொருவருக்கும் நாடு திரும்புவதற்கு ஏதாவது காரணம் இருந்திருக்கும்.

ஏதாவது விபத்தில் ஒருவர் இறக்கும் போது இறப்பது அவர் மட்டுமல்ல அவர் கன‌வுகளும், அவரை சுற்றியிருப்பவர்களின் வாழ்க்கையும்தான். இந்த நூற்றி ஐம்பத்து ஒன்பது பேரும் சில‌ நிமிடங்கள் மரணத்தின் வலியை அனுபவித்து விட்டு போய் விட்டார்கள். அவர்களது குடும்பங்கள் இனி அந்த வலியை ஒவ்வொரு நாளும் வாழ்க்கை முழுவதும் அனுபவிக்கப்போவதை நினைத்தால் துக்கம் தொண்டையை அடைத்துக்கொள்கிறது. இறைவன் அவர்களுக்கு மன நிம்மதியை விரைவில் மீட்டுக்கொடுப்பானாக.

வாழ்வில் ரிஸ்க் எடுப்பதே நன்றாக வாழத்தான். ஆனால் பிறரின் வாழ்க்கையை வைத்து ரிஸ்க் எடுப்பதன் அத்தியாவசியம் என்ன? ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் குறுகிய ஓடுதளத்தை கொண்ட விமான நிலையத்தை ரிஸ்க் எடுத்து சர்வதேச விமான நிலையமாக மாற்ற‌ வேண்டிய அவசியம் என்ன?

நல்ல விஸ்தாரணமான இடவசதி, தரமான ஓடுதளம் கொண்ட எத்தனையோ விமான நிலையங்கள் இருக்கும் போது. குறுகிய ஓடுதளத்தில் மிகச்சரியாக துல்லியமாக விமானத்தை இறக்காவிட்டால் பெரும் விபத்து ஏற்படும் என்று விமானிகளுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு என்ன அவசியம் வந்தது?

இன்னும் சில செய்திகளில் போயிங் 737 ரக விமானங்களின் விபத்து விகிதம் மற்ற‌ விமான மாடல்களை விட அதிகம் என்று சொல்லும் போது. மற்ற‌ நாடுகளை போல் தரம் வாய்ந்த ஏர்பஸ் விமானங்களை வாங்க என்ன தயக்கம்? பணம்தான் பிரச்சனையென்றால் யாரும் நம்ப மாட்டார்கள். ஏனெனில் எனக்கு தெரிந்து மற்ற‌ விமான சேவைகளை விட ஏர் இந்தியாவில் ஊர் திரும்ப 200 ரியால் அதிகம். டிக்கட்டுகளும் விரைவில் விற்று விடுகிற‌து.

ஆள்பவர்களே நீங்கள் எதில் வேண்டுமென்றாலும் ஊழல் செய்யுங்கள். எங்களுக்கு அது பழகிப்போய் விட்டது. ஆனால் மக்களின் உயிர் விசயத்தில் மட்டும் அலட்சியமாக இருந்து விடாதீர்கள். அது தரை வழிப்போக்குவரத்தாக இருந்தாலும், வான் வழிப் போக்குவரத்தாக, மருந்தாக இருந்தாலும் சரி. நடந்த பின் யார் மேல் குற்றம் சொல்லலாம் என்பதை விட்டு விட்டு. இனி இது போல் நடக்காமல் இருக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை எந்த சமரசமும் இல்லாமல் உறுதியுடன் எடுப்பதே உங்களை பதவியில் வைத்த எங்களுக்கு நீங்கள் செய்யும் கைமாறாகும்.

இலவசங்களுக்கும் , சலுகைகளுக்கும் நீங்கள் செலவழிக்கும் பணத்தில் ஒரு பகுதியை போக்குவரத்து பாதுகாப்புக்கும் செலவழித்து, சர்வதேச தரம் என்று பேச்சிலும், போர்டிலும் தொங்காமல் நவீன தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி உண்மையான சர்வதேச தரத்துக்கு உயர்த்துமாறு உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறோம்.

நேற்று இரவு அந்த கன்னட நண்பர் சொன்னார். எனது ரூமில் ஏசி மாட்டியவரின் தங்கையும் மச்சானும் ஒரு குழந்தையுடன் துபாயில்தான் இருக்கிறார்கள். நேற்றைய விபத்தில் தங்கையும் குழந்தையும் சிக்கிக்கொண்டார்கள் என்று. : (

,

Thursday, May 6, 2010

கல் சிலேட்டு , தேனீ உமர் தம்பி !

அப்போதெல்லாம் கல் சிலேட்டுகள் தான் பிரபலமாக இருந்தது. எனக்கான சிலேட் இரண்டாம் வகுப்பில்தான் வாங்க முடிந்தது. அதில் எழுதத்தொடங்கினால் எழுதிக்கொண்டே இருக்கணும் போல தோன்றும் அப்படி மாவு மாதிரி எழுதும். எழுத கடல் குச்சி கிடைத்துவிட்டால் கொண்டாட்டத்திற்கு அளவே இல்லாமல் போய் விடும்.

குச்சிகளை கடன் கொடுப்பதோடு நிறைய பேருக்கு நட்பையும் சேர்த்து கொடுத்திருக்கிறேன். பின்பு அவர்கள் நட்போடு சேர்த்து இருமடங்காக திருப்பித்தருவார்கள். இது பென்சிலுக்கும் நடக்கும்.

மூணாம் வகுப்பில் இருந்து பேனாவை பயன்படுத்தியதாக ஞாபகம். எனது அம்மாவின் அம்மா வாங்கிதந்த முதல் பேனா இன்னும் நினைவில் நிற்கிறது.

மை பேனா பயன்படுத்துவதில் ஒரு வசதி. மை தீர்ந்து விட்டால் அடுத்தவனை ரெண்டு சொட்டு பெஞ்சில் விடச்சொல்லி உறிஞ்சி விடலாம். இப்போதும் ஏதேனும் பள்ளிக்கு சென்று மை உறிஞ்சிய பெஞ்சுகளையும், டெஸ்க்குகளையும் பார்த்தால் அதில் ஆயிரமாயிரம் நட்பின் கதைகளையும் சேர்த்தே உறிஞ்சியிருப்பதாக தோன்றும்.

ஆறாம் வகுப்பில் பேனாக்களின் ஹீரோவான கரும்பச்சை ஹீரோ பேனா கிடைத்தது. கையில் நோகியா 97 வைத்திருப்பதை விட அதிக மகிழ்ச்சியை உணர்ந்த காலம் அது.

பின்பு ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் பால்பாயிண்ட் பேனாக்கள் சக்கை போடு போட்டன. கரைபடியும் கவலை இனி இல்லை உங்களுக்கு என்ற விளம்பர வாசகம் போல அதனால் கைகளில் கறை படிவது குறைந்தது.

பாலிடெக்னிக் படிக்கும் போது ஜெல் பேனாக்கள் பிரபலமாகின. நான் வைத்திருந்த ஸ்டிக் மைக்ரோ டிப் பேனாவை பார்த்த தோழி ஒருத்தி அது போல் ஒன்றுக்கு ஆசைப்பட்டாள்.

சரியென்று மறுநாள் வாங்கி வரும் போது நண்பன் சொன்னான் பேனா பரிசு கொடுத்தால் நட்பு முறிந்து விடும் என்று. அதைச் சொல்லி அவளிடம் பணம் வாங்கிக் கொண்டேன். கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் அதனால் நட்பு இருமடங்கு வளர்ந்தது.

மனதில் பைனரியாக தோன்றும் எண்ணங்களை நமது மூளை கம்பைல் செய்து விரல்களின் வழியே அனுப்பி பேனாவில் வழியச்செய்வதால் கிடைப்பதுதான் நம் அழகழகான எழுத்துகள்.

நம் வாழ்வோடு ஆறாம் விரலாய் ஒட்டிக்கொண்டு வந்துள்ள‌ மை பேனாவை கண்டுபித்தவர் வாட்டர்மேன் என்றும் பால்பயிண்ட் பேனாவை கண்டுபிடித்தவர் லாய்ட் என்றும் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். ஐந்து ரூபாய்க்கு வாங்கும் பேனாவை கண்டுபிடித்த ஒருவரின் வாழ்நாளின் பெரும் பகுதியை இந்த பேனாவே கரைத்திருக்கும் என்று உணர்ந்திருக்கிறோமா?

அது போலவே முன்பு பேனாவை எழுத பயன்படுத்தியது போல் இப்போது கணினியை பயன்படுத்துகிறோம். இதில் நீங்களும் நானும் எளிய தமிழில் தொடர்பு கொள்ள இந்த எழுத்துருக்களை கண்டுபிடித்தது யாரென்று நாம் நினைத்துப்பார்த்து நன்றி செலுத்தியிருக்கிறோமா?

அப்படியொரு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக விடமாட்டோம்தானே. ஏனெனில் காலையில் எழுந்து இரவு படுக்கச்செல்லும் வரை நடக்கும் சின்ன சின்ன விசயங்களுக்கு கூட மற்றவர்களுக்கு நன்றி சொல்லி பழக்கப்பட்டவர்கள் நாம். அப்படியொரு வாய்ப்பு கிடைத்தால் விடுவோமா?

கிடைத்திருக்கிறது. ஆம் இந்த தமிழ் எழுத்துருக்களுக்காக பிரதிபலன்பாராமல் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை செலவழித்து கண்டுபிடித்து நமக்கு அளித்த "தேனீ" உமர் தம்பி அவர்களுக்கு நாம் நமது நன்றிகளை செலுத்துவோம்.

தமிழ் எழுத்துருக்கள் (Thenee, Theneeuni மற்றும் சில..) ஆங்கிலம்-தமிழ் அகராதி, தமிழ் எழுத்துறுமாற்றி (தமிழெழுதி), மற்றும் தமிழ் இணைய தளங்களைப் பார்வையிட உதவும் தானியங்கி/டைனமிக் எழுத்துறுமாற்றி மற்றும் பல தொடக்கநிலை நிரழி/மென்பொருள்களின் சொந்தக்காரராக இருந்தாலும் அவை எதிலும் தனது பெயரோ அல்லது அதற்கு பண‌த்தையோ எதிர் பார்க்காமல் சேவையாற்றியவர்கள் உமர்தம்பி அவர்கள்.

மறைந்த உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்தொண்டைப் போற்றும் வகையில் கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ்கணிமைக்கு பங்காற்றியவர்களுக்கு 'யூனிகோட் உமர்தம்பி' பெயரால் விருது வழங்கி கவுரவிப்பதே காலத்தினால் செய்த நன்றியாகும் அதை நம் பதிவர்கள் அனைவரும் ஒத்த கருத்துடன் பதிவுகள் மூலமாக எல்லோரிடமும் பரப்புவதே நாம் அவருக்கும் அவர் பணிக்கும் செய்கின்ற நன்றிக்கடனாகும்.

மேலும் அவர்களைப்பற்றி அறிய‌ இதை வாசியுங்கள்.

,

இதையும் விரும்புவீர்கள்.

Related Posts with Thumbnails